ஸ்டாலின் பலவீனமானவர்.. திமுக பெரும்பான்மை பெறாவிட்டால் ஆட்சியில் பங்கு உறுதி- துக்ளக் குருமூர்த்தி
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பலவீனமான தலைவர்; தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனால் கூட்டணி ஆட்சி.. ஆட்சியில் பங்கு கொடுத்துதான் ஆக வேண்டிய நிலைமை உருவாகும் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தலை அன்றே ஆதரித்தவர் கருணாநிதிதான் எனவும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 55-வது ஆண்டு விழாவில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் இதனை பாஜக கொண்டு வருகிறது என்பதற்காகவே எதிர்ப்பு தேவையாக இருக்கிறது. இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல்தான் நடந்து கொண்டிருந்தது. 1971-ல்தான் இந்த முறை மாறியது. அப்போதுகூட ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்தவர் கருணாநிதிதான்.. தேசியத் தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்; தனியாக தேர்தல் நடத்த வேண்டும்; தனித்தனியாக தேர்தல் நடந்தால் செலவாகும் என்று சொன்னவரே கருணாநிதிதான். இதை மக்கள் மறந்துவிட்டனர். இது சாத்தியமா? இல்லையா? என்பதை இன்றைக்கு கூற முடியாது.

ஆட்சியில் பங்கு தர மறுத்த கருணாநிதி
திமுக பெரிய வெற்றி பெறும்போது அதிகாரத்தில் யாருக்கும் பங்கு கொடுக்கமாட்டார்கள். 2006-ல் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை வரவில்லை. அந்த சமயத்தில் திமுகவின் கையை முறுக்கி அதில் சேர வேண்டும் என முயற்சித்த கட்சிகளால் சேர முடியவில்லை. அதற்கு காரணம் கருணாநிதி போன்ற பெரிய தலைவர் இருந்ததால்தான்.
ஆட்சியில் பங்குதர வேண்டிய நிலையில் ஸ்டாலின்
ஸ்டாலின் மாதிரி ஒரு பலவீனமான தலைவர் இருந்து, திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனால் நிச்சயமாக ஆட்சியில் பங்கு கொடுத்துதான் ஆக வேண்டும். அதனால் தேர்தல் முடிவு எப்படி இருக்கிறதோ அப்படித்தான் ஆட்சியில் பங்கு என்பது வரும். இவ்வாறு துக்ளக் குருமூர்த்தி கூறினார்.












Click it and Unblock the Notifications