திடீர் திருப்பம்.. திருவாரூர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக களமிறங்குகிறார் ஸ்டாலின்?
Recommended Video

சென்னை: இடைத் தேர்தலை சந்திக்க உள்ள திருவாரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக மு.க.ஸ்டாலினை களமிறக்கச் செய்ய அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வரும் 28ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, திமுக சார்பில் விருப்ப மனு வினியோகம் இன்று ஆரம்பித்ததுள்ளது. வரும் 4ம் தேதி, வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளது.

திடீர் திருப்பம்
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரான பூண்டி கலைவாணன் இத்தொகுதியில் அக்கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு அதிகம் என கூறப்பட்டது. இந்த நிலையில்தான், திடீர் திருப்பமாக திமுக தலைவர் ஸ்டாலினை, திருவாரூர் தொகுதியில் போட்டியிட வைக்க முயற்சி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டி.ஆர்.பாலு, திமுக கொறடா, சக்கரபாணி போன்ற முன்னணி தலைவர்கள், திருவாரூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்துவோரில் முக்கியமானவர்கள்.

கருணாநிதி வாரிசு
திருவாரூர் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, ஸ்டாலினை, டி.ஆர்.பாலு சந்தித்து தனது யோசனையை முன் வைத்ததாகவும், திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஸ்டாலினோ இப்படி தான் யோசிக்கவேயில்லை என்றும், தலைவர்கள் கருத்துக்களை பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளாராம். கருணாநிதி வகித்த தொகுதியில், ஸ்டாலின் போட்டியிடுவது அவரது வழித்தோன்றல் என்பதை நிரூபிக்கும் வகையில் அமையும் என்பதுதான் திமுக மூத்த நிர்வாகிகள் வற்புறுத்தலுக்கு காரணமாம்.

எதிர் கருத்து
திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனும்கூட, ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு ஆதரவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ள ஸ்டாலின், அதைவிட்டுவிட்டு திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிட அவசியம் இல்லை என்ற ஒரு கருத்தும் கட்சிக்குள் சிலரால் முன் வைக்கப்படுகிறது.

திமுகவின் வியூகம்
லோக்சபா தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் திருவாரூர் இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆர்.கே.நகர் போல தோல்வியை சந்தித்தால், லோக்சபா தேர்தலில் திமுக தொண்டர்கள் மனரீதியாக மிகப்பெரிய பின்னடைவை சந்திப்பார்கள் என்பதால், வேறு வழியின்றி, திருவாரூரில் ஸ்டாலினே களமிறங்கிவிடலாம் என்ற யோசனை உள்ளதாம். ஒருவேளை, அழகிரி சுயேச்சையாக களமிறங்கினால் ஸ்டாலின் திமுக வேட்பாளராகக்கூடும். அல்லது பூண்டி கலைவாணனுக்குதான் வாய்ப்பு என்கிறார்கள் விவரம் அறிந்தோர்கள். ஏனெனில் திமுக ஓட்டுக்களை அழகிரி பிரித்துவிட்டால், அது திமுகவிற்கு பாதகமாகிவிடும். லோக்சபா தேர்தலில் திமுவின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய திரூவாரூர் அக்னி பரிட்சை போன்றது என்பதால் இந்த திட்டத்தில் உள்ளனராம். திமுகவில் நடக்கும் இந்த அதிரடி வியூகங்களால் திருவாரூர் தேர்தல் களை கட்ட ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications