மதவாத கண்ணாடி அணிந்து பார்க்காதீர்கள் : டெல்லி பல்கலை நிர்வாகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை : "எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல் - மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும்" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியலின எழுத்தாளர்களின் படைப்புகள், டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் எழுத்தாளர்களான பாமாவின் "சங்கதி" மற்றும் சுகிர்தராணியின் "கைம்மாறு என்னுடல்" படைப்புகள் மற்றும் மகாஸ்வேதா தேவியின் சிறுகதையான "திரௌபதி" ஆகியவை நீக்கப்பட்டுள்ளன.

சுல்தானாவின் கனவு
நேற்று நடந்த பல்கலைக்கழக மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட படைப்புகளுக்கு பதில் சுல்தானாவின் கனவு என்ற புத்தகமும், ராமாபாயின் படைப்புகளும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

விளிம்புநிலை மக்கள் குரல்
இதனிடையே டெல்லி பல்கலைக்கழகம் ஆங்கில இலக்கியத் துறையில் இருந்து தமிழ் படைப்புகள் நீக்கப்பட்டடுள்ளது குறித்து பல்கலைக்கழகத்தில் இருந்து முறையான முன்னறிவிப்பு எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவிஞர் சுகிர்தராணி, ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் குரலாகதான் எங்களின் குரல் இருக்கிறது. இந்தக் குரல்களை நசுக்குகின்ற செயலாகத்தான் இந்நிகழ்வை பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். பலரும் டெல்லி பல்கலைக்கழகத்தின் செயலை கண்டித்துள்ளனர். மீண்டும் தமிழ எழுத்தாளர்களின் படைப்புகளை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஒருதலைபட்சமான முடிவு
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தாளர் பாமா அவர்களின் சங்கதி, தமிழ்க் கவிஞர் சுகிர்தராணி அவர்களின் கைம்மாறு, என்னுடல் ஆகிய மொழியாக்கப் படைப்புகளை அந்தத் துறை பேராசியர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமலேயே மேற்பார்வைக் குழுவின் ஆலோசனையின் பெயரில் பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியிருப்பது ஒருதலைப்பட்சமான முடிவு. இது எவ்வகையிலும் ஏற்க முடியாத செயலாகும்.

மதவாதக் கண்ணாடி
பெண்கள் உரிமை - ஒடுக்கப்பட்டோர் விடுதலை - மானுட மேன்மை குறித்து பல படைப்புகளை வழங்கி வரும் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல் - மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும் எனப் பல்கலைக்கழக நிர்வாகத்தையும் ஒன்றிய அரசையும் வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications