"இனி மகளிர் உரிமை தொகை கிடைக்குமா?" பெண்களிடையே பெரும் குழப்பம்! ஸ்டாலின் சொன்ன முக்கியமான மேட்டர்
சென்னை: தமிழகத் தேர்தல் களத்தில் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாகத் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ள நிலையில், ஓரிரு நாட்களில் புதிய ஆட்சி அமையும் எனத் தெரிகிறது. இதற்கிடையே மகளிர் உரிமை தொகை தொடருமா என்பதே பலரது கேள்வியாக உள்ள நிலையில், இது தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் சில முக்கியமான தகவல்களைக் கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு தேர்தலில் 108 இடங்களில் வென்றுள்ள தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான நம்பர் இல்லாததால் அதைத் திரட்டும் முயற்சியில் விஜய் தரப்பு இறங்கியுள்ளது. இதற்கிடையே தவெக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முயற்சிகள் நடப்பதாகவும் திமுக அதிமுக கூட்டணி அமைக்கவுள்ளதாக எல்லாம் தகவல்கள் பரவின. இருப்பினும், இதை எல்லாம் திமுக தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

உரிமை தொகை
குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின், தவெக ஆட்சி அமைப்பதில் திமுக எந்தவொரு சிக்கலையும் ஏற்படுத்தாது எனத் திட்டவட்டமாகக் கூறினார். ஆங்கில செய்தி நிறுவனமான டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு ஸ்டாலின் அளித்த பேட்டியில், பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தை எக்காரணம் கொண்டும் நிறுத்தாமல் புதிய அரசு தொடர வேண்டும் என்றார். மேலும், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கொண்டு வரப்பட்ட மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தைத் தடையின்றி வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
விஜய் தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னதற்கு ஸ்டாலின், "தற்போதைய நிதிநிலையில் அதைச் சாத்தியப்படுத்துவது கடினம். நிதிச் சுமை அதிகம் இருக்கிறது. ஒருவேளை 2,500 தர முடியாவிட்டாலும், நாங்கள் கொடுத்த அந்த 1,000 ரூபாயையாவது தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
செய்தால் மகிழ்ச்சி
திமுக 2021ல் சொன்ன 90% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகக் கூறிய ஸ்டாலின், நீட் என்பது மத்திய அரசு விவகாரம் என்பதாலேயே நீக்க முடியவில்லை எனத் தெரிவித்தார். மேலும், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்கும் திட்டம் குறித்துக் கேட்கப்பட்டதற்கு ஸ்டாலின், "இதைச் செய்வது கடினம், இருந்தாலும் செய்தால் மகிழ்ச்சி" என்று தனது ஸ்டைலில் பதிலளித்தார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது திமுகவின் மிக முக்கிய வாக்குறுதியாகக் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து 2023 பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. செப்டம்பர் 15ம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் காஞ்சிபுரத்தில் இந்தத் திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1.06 கோடி தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டது. இது தி.மு.க அரசின் மிக முக்கியமான நலத்திட்டங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
விஜய்
இந்த முறை விஜய்யும் இதே ஸ்டைலில் தனது வாக்குறுதியை முன்வைத்தார். அதாவது மாதம் 1,000 ரூபாய்க்குப் பதிலாக மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என விஜய் அறிவித்திருந்தார். மாநிலத்தில் ஏற்கனவே உள்ள கடனைச் சமாளித்துக்கொண்டு, இந்த 2,500 ரூபாய் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியம் தானா என்றே பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். இதுதான் விஜய்யின் அரசுக்குக் காத்திருக்கும் முதல் இமாலய சவாலாக உள்ளது.












Click it and Unblock the Notifications