ஒரே ஒரு முறை ‘அப்பா’ என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே?- வைரலாகும் ஸ்டாலினின் உருக்கமான இரங்கல்
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்தபோது, ஒரே ஒரு முறை 'அப்பா' என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே? என மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த இரங்கல் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது,
கருணாநிதியின் 2-வது ஆண்டு நினைவுதினம் தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கருணாநிதியின் உருவபடத்துக்கு மலர்தூவி மரியாதை வணக்கம் செலுத்தப்படுகிறது.
சமூக வலைதளங்களில் கருணாநிதியின் சாதனைகள் பகிரப்பட்டு வருகிறது. அதில் கருணாநிதி மறைந்த போது மு.க.ஸ்டாலின் வெளியிட்ட, ஒரே ஒரு முறை 'அப்பா' என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே? என்கிற இரங்கலை திமுகவினர் மீண்டும் ஷேர் செய்து வருகின்றனர்.
ஸ்டாலினின் உருக்கமான அந்த இரங்கல்:
எங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லும் எனது ஆருயிர்த் தலைவரே, இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்?
என் உணர்வில்,உடலில்,
ரத்தத்தில்,
சிந்தனையில்,இதயத்தில் இரண்டறக் கலந்து விட்ட தலைவா!
எங்களையெல்லாம் இங்கேயே ஏங்கவிட்டு எங்கே சென்றீர்கள்?
"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்று உங்கள் நினைவிடத்தில் எழுத வேண்டும் என்று 33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினீர்கள்.
இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக இடையறாது உழைத்தது போதும் என்ற மனநிறைவுடன் புறப்பட்டு விட்டீர்களா?
95 வயதில்,80 ஆண்டு பொதுவாழ்வுடன் சளைக்காமல் ஓடி, 'நாம் தாண்டிய உயரத்தை யார் தாண்டுவார்கள் பார்ப்போம்' என்று போட்டி வைத்து விட்டு மறைந்து காத்திருக்கிறீர்களா?
திருவாரூர் மண்ணில் உங்கள் 95வது பிறந்த நாளாம் சூன் 3 ஆம் நாள் பேசும் போது, ' உங்கள் சக்தியில் பாதியைத் தாருங்கள்' என்றேன். அந்த சக்தியையும் பேரறிஞர் அண்ணாவிடம் நீங்கள் இரவலாகப் பெற்ற இதயத்தையும் யாசிக்கிறேன்;தருவீர்களா தலைவரே!
அந்தக் கொடையோடு,இன்னும் நிறைவேறாத உங்கள் கனவுகளையும் இலட்சியங்களையும் வென்று காட்டுவோம்!
கருணாநிதி 2-ம் ஆண்டு நினைவு நாள்- வைரமுத்து மலர்தூவி நினைவஞ்சலி
கோடானுகோடி உடன்பிறப்புகளின் இதயத்திலிருந்து ஒரு வேண்டுகோள்.....ஒரே ஒரு முறை ...
"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!" என்று சொல்லுங்கள் தலைவரே! அது ஒரு நூறாண்டு எங்களை இன-மொழி உணர்வோடு இயங்க வைத்திடுமே!
"அப்பா அப்பா" என்பதைவிட,"தலைவரே தலைவரே" என நான் உச்சரித்ததுதான் என்வாழ்நாளில் அதிகம்.
அதனால் ஒரே ஒரு முறை, இப்போது 'அப்பா' என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே? இவ்வாறு 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டாலின் இரங்கல் வெளியிட்டிருந்தார். இதனை திமுகவினர் மீண்டும் பகிர்ந்து வருகின்றனர்.