கடமை உணர்வின் அடையாளம் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி... மு.க.ஸ்டாலின் பாராட்டுக் கடிதம்
சென்னை: தந்தை இறந்துவிட்டார் என்ற செய்தியறிந்தும் காவல்துறை அணிவகுப்பை நடத்தி முடித்த காவல் ஆய்வாளர் மகேஸ்வரியை பாராட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கடமை உணர்வின் அடையாளமாக காவல் ஆய்வாளர் மகேஸ்வரி திகழ்ந்துள்ளார் என புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;
கொரோனா சிகிச்சை...சென்னையில் 5 மாதங்கள் வீட்டுக்கே செல்லாத டாக்டர்!!
கம்பீர காக்கி
கடமை உணர்வின் அடையாளமாகத் திகழும் காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி அவர்களுக்கு, வணக்கமும் வாழ்த்துகளும்! கம்பீரமான காக்கி உடுப்பை அணிந்தபிறகு வீட்டுச் சூழ்நிலை எப்படி இருந்தாலும், நாட்டு நிலையும் - பொதுமக்களின் பாதுகாப்புமே முதன்மையானது என்பதை உணர்ந்து செயலாற்றுபவர்களே சிறப்பான காவல் அதிகாரிகளாகத் திகழ்கிறார்கள். தமிழக காவல்துறை எத்தனையோ சிறப்பான காவல் அதிகாரிகளைத் தந்த மாநிலமாக; இந்தியாவுக்கு முன்னோடியாகத் திகழ்ந்துள்ளது.
காவல்துறை அணிவகுப்பு
அந்த வகையில், தங்களின் தந்தையார் திரு. நாராயணசாமி அவர்கள் இறந்துவிட்டார் என்ற வேதனை மிகுந்த செய்தியை அறிந்த பிறகும், ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை நாளில் நிறைவேற்ற வேண்டிய கடமையை நிறைவேற்றும் வகையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கொடியேற்று விழாவில், காவல்துறையின் அணிவகுப்பை சிறப்பாக நடத்தி, வாள் சுழற்றி சல்யூட் வைத்து, கடமையுணர்ச்சியின் சிகரமாகத் திகழ்ந்ததை தமிழகமே போற்றுகிறது.
காவல்துறை பணி
பாசத்தைவிட கடமையே முக்கியம் என்பதை காவல்துறையில் தங்களின் கீழ் பணியாற்றும் மற்றவர்களுக்கும், இனி இந்தப் பணியில் சேர ஆர்வமாக உள்ள தலைமுறையினருக்கும் உணர்த்தியிருக்கிறீர்கள். காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு சிறப்பு துணை ஆய்வாளராக உள்ள தங்கள் கணவரும் குழந்தைகளும் தங்களின் கடமைக்குத் துணை நின்றதை அறிந்த போது மேலும் மதிப்பு கூடியது.
Recommended Video
வாழ்த்துகள்
வேதனையை விழுங்கிக் கொண்டு, தேசத்தின் பெருமைக்குரிய தினத்தின் சிறப்பைப் போற்றும் வகையில் செயலாற்றிய தங்களுக்கு வணக்கமும் வாழ்த்துகளும் தெரிவித்து, தந்தையாரை இழந்து வாடும் தங்களின் துயரில் பங்கேற்கிறேன். காக்கிச் சீருடைக்குரிய கம்பீரமான பணிகள் தொடரட்டும்!