வசந்தகுமாரிடம் நான் பேசிய போது பயமோ... பதற்றமோ இல்லை... நினைவுகளை பகிர்ந்த மு.க.ஸ்டாலின்
சென்னை: வசந்தகுமார் மருத்துவமனையில் இருந்தபோது வழக்கமான உற்சாகத்துடன் தன்னிடம் தொலைபேசியில் அவர் பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் நினைவேந்தல் நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற அவர் வசந்தகுமார் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
அதன் விவரம் பின்வருமாறு;
முதலில் தொழில்... பிறகு அரசியல்... நிதானமாக அடியெடுத்து வைக்கும் வசந்தகுமார் மகன்..!
நினைவேந்தல்
''வசந்தகுமார் அவர்களுக்கு நோய் தொற்றியிருக்கிறது என்பதைக் கேள்விப்பட்டதும், அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் உற்சாகமாகத் தான் பேசினார். அவரிடம் ஒரு பயமோ, பதற்றமோ இல்லை. அதனால் விரைவில் மீண்டு வந்துவிடுவார் என்று நம்பினேன். ஆனால் திடீரென்று உடல்நிலையில் பின்னடைவு, அபாயக்கட்டத்தில் இருக்கிறார் என்றெல்லாம் தகவல் வந்தபோது உண்மையில் நம்ப முடியவில்லை. இறுதியில் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது''.
ஸ்டாலின் புகழாரம்
''ஆண்டுகளாக வசந்தகுமார் அவர்களைத் தெரியும் என்றாலும் 2006-ம் ஆண்டு அவர் சட்டமன்ற உறுப்பினராக வந்த பிறகு அதிகமாக நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. எப்போதும் சிரித்த முகம். அதுதான் அவரோட வெற்றிக்கு காரணம். எல்லா நிறுவனத்துக்கும் ஒரு பிராண்ட் வைத்திருப்பார்கள். அந்த பிராண்ட் தான் அந்த நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம் என்றும் சொல்வார்கள்.என்னைப் பொறுத்தவரையில் வசந்த் அண்ட் கோ-வின் வெற்றிக்கு உண்மையான காரணம், வசந்தகுமார் அவர்களின் அந்தச் சிரிப்பு தான்''.
முன் மாதிரி மனிதர்
''எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் அவர் முகம் சிரித்துக் கொண்டே இருக்கும். அத்தகைய சிரித்த முகத்துக்குச் சொந்தக்காரர் முதன்முதலாக நம்மை எல்லாம் அழ வைத்து விட்டுச் சென்றுவிட்டார். இந்த நாட்டு இளைஞர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு எத்தனையோ கருத்துகள் வசந்தகுமார் அவர்களின் வாழ்க்கையில் உண்டு. வசந்தகுமார் அவர்களின் வாழ்க்கையைப் படிப்பதன் மூலமாக இளைஞர்கள் மிகப்பெரிய உயர்வை அடைய முடியும் என்று நான் கருதுகிறேன்''.
கையில் காசு இல்லை
''இருபது வயது இளைஞராகச் சென்னைக்கு வந்து-இன்றைக்கு ஆயிரம் ஊழியர்கள் கொண்ட நிறுவனத்தை நடத்தும் அளவுக்கு உயர்ந்தார் என்றால் அது சாதாரணமானது அல்ல! தொடக்க காலத்தில் விஜிபி நிறுவனத்தில் 70 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்திருக்கிறார். அவரது பணிகளைப் பார்த்து 300 ரூபாயாகச் சம்பளம் உயர்த்தி மேலாளராகவும் உயர்வைப் பெற்றிருக்கிறார். அதன்பிறகு சொந்தமாகத் தொழில் செய்ய நினைக்கிறார். ஆனால் கையில் காசு இல்லை. அவரிடம் இருந்தது ஒரே ஒரு சைக்கிள் மட்டும் தான்''.
தன்னம்பிக்கை
''வசந்தகுமார் அவர்கள் ஒரு முறை சொன்னார்: "தொழில் தொடங்கிய நேரத்தில் என்னிடம் ஒரு ரூபாய் கூட இல்லை. யாரிடமும் வேலை செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்" என்று சொன்னார். முன்னேற வேண்டும் என்ற ஆசை தான் அவரை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியது. ஒரு தொழில் தொடங்குவதற்கு நிறையப் பணம், அதிகார பலம், உதவி செய்ய நிறையப் பேர் இருக்க வேண்டும் என்பது இல்லை; தன்னம்பிக்கையும், வெற்றி பெற வேண்டும் என்ற வெறியும் இருந்தால் போதும் என்பதை வசந்தகுமாரின் வாழ்க்கை காட்டுகிறது''.
வாழ்வில் உயர்வு
''இன்னும் முக்கியமாகச் சொல்ல வேண்டுமானால், யாரிடம் அவர் பணியாற்றினாரோ அவர்களே அவரை வாழ்த்தும் வகையில் உயர்ந்தார். வசந்தகுமார் அவர்களது வாழ்க்கை மட்டுமல்ல; மரணமும் நமக்கு சில பாடங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அனைவரும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். தடுப்பு ஊசியும் இல்லை- நோய் வந்தால் சிகிச்சைக்கு மருந்தும் இல்லை- என்ற நிலையில் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் இருக்கிறோம்''.
பாதுகாப்பு முக்கியம்
''மத்திய அரசும் மாநில அரசும் மக்களை கைகழுவி விட்டன. உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்கள்.
சுகாதார உதவியும் இல்லை- பொருளாதார உதவியும் இல்லை- தார்மீக உதவிகளும் இல்லை- என்ற நிலையில் மக்களை மத்திய மாநில அரசுகள் கைவிட்டுவிட்டன. அனைவரும் பாதுகாப்புடன் இருப்போம்! அதே நேரத்தில் நமது கடமைகளைத் தொடர்வோம் என்று சொல்லி விடைபெறுகிறேன்''.