திஷா ரவியை கைது செய்து கொடுங்கோல் வழியில் அடக்கியது அதிர்ச்சியளிக்கிறது.. ஸ்டாலின்
சென்னை: சுற்றுச் சூழல் ஆர்வலர் திஷா ரவியை கைது செய்தது அதிர்ச்சியளிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் என்ன மாதிரியான ஹேஷ்டேக் உருவாக்க வேண்டும், எப்படிப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டும், போராடும் விவசாயிகளுக்கு ஏன் ஆதரவு அளிக்க வேண்டும்? என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டூல்கிட்டை சமூகவலைதளங்களில் பகிர்ந்ததற்காக சுற்றுச்சூழலாளர் திஷா ரவியை கைது செய்துள்ளனர்.
அவரை கைது செய்து போலீஸ் காவலில் 5 நாட்கள் வைத்துள்ளன. இதற்கு அரசியல்வாதிகள், பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:
அற்பமான குற்றச்சாட்டுகளைப் புனைந்து திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அரசை விமர்சிப்பவர்களைக் கொடுங்கோல் வழிகளில் அடக்குவது சட்டத்தின் ஆட்சி ஆகாது.
இத்தகைய தண்டிக்கும் போக்கைத் தவிர்த்து, இளைஞர்களிடம் இருந்து எழும் எதிர்ப்புக் குரல்களுக்குச் செவிமடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.