வழிபடவில்லை என்றாலும் பரவாயில்லை.. முதல்வர் வாழ்த்தாவது கூறவேண்டும்.. மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
சென்னை: திமுக தலைவராக இல்லாமல் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்ல வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் ஆவணியில் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதைத் தவிர தெரு முனைகளிலும், சாலைகளின் முக்கிய சந்திப்புகளிலும் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பின்னர் அவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நிலையில், இந்தாண்டு வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்யப்பட்டது.

எல்.முருகன் பேச்சு
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறுகையில், உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்களால் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
அனைவரும் இணைந்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். மக்களால் கொண்டாடப்படும் அனைத்து திருவிழாக்களுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டியது அரசியல் தலைவர்களின் கடமை. குறிப்பாக திமுக தலைவராக இருந்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்லவில்லை என்றால் ஒன்றுமல்ல.
ஆனால் முதலமைச்சராக இருக்கும்போது அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லுவதுதான் முறையாக இருக்கும். அவருக்கு விருப்பமிருந்தால் விநாயகருக்கு கொலுக்கட்டை வைத்து வழிபடலாம். அப்படியில்லை என்றால், குறைந்தபட்சம் வாழ்த்தாவது கூற வேண்டும்.

வேல் யாத்திரை
சில ஆண்டுகளுக்கு முன் பாஜக சார்பாக வேல் யாத்திரை முன்னெடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் திமுக தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் வேலை எடுத்து சென்றார்கள். அவர்களும் வேலை கையில் எடுத்தார்கள். அதேபோல் வாக்குக்காக அல்லாமல் அனைத்து திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளுக்கும் பாகுபாடின்றி வாழ்த்து சொல்ல வேண்டும்.
மற்ற திருவிழாக்களின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறுகிறார். அவர்களின் கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறார். அதுபோல் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு தாமாக முன்வந்து வாழ்த்து கூற வேண்டும்.

தமிழக சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது. மகளிரின் உடைமைகளுக்கும், உயிருக்கும் பாதுகாப்பில்லை. கஞ்சா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிலையில் தமிழ்நாடு உள்ளது. இதனை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

திமுக மீது விமர்சனம்
தொடர்ந்து நாட்டின் வளர்ச்சிக்காக என்ன திட்டம் வந்தாலும் அதனை வரவேற்க வேண்டும். 8 வழிச்சாலை திட்டத்தின் போது திமுக தரப்பில் என்ன மாதிரி நடவடிக்கைகள், அறிக்கைகள் வெளியாகின என்பது அனைவருக்கும் தெரியும். எப்போதும் நாட்டின் வளர்ச்சிக்கு உட்கட்டமைப்புக்கு என்பது மிகவும் அவசியம். அதனால் வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பு திட்டங்களில் அரசியல் செய்யக் கூடாது என்று தெரிவித்தார்.















Click it and Unblock the Notifications