எங்கே முதல்வர் என்று கேட்ட மக்கள்.. இங்கேதான் இருக்கிறார் என்ற அதிகாரிகள்.. ஸ்டாலின் கிண்டல்
Recommended Video
சென்னை: ஆளும் கட்சிக்காரர்கள், போலீசார் புடைசூழ, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு நடத்தியுள்ளார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து இன்று மதியம், ஸ்டாலின் அளித்த பேட்டி: டெல்டா மாவட்டங்களில் இருக்கக்கூடிய மக்கள் உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி, குடிக்கத் தண்ணீர் இன்றி, மிகுந்த துயரத்திற்கு ஆளாகி நடுத்தெருவில் நின்று கொண்டுள்ள ஒரு அக்கிரமம்.. கொடுமை நிகழ்ந்து கொண்டுள்ளது.
முதல்வர் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றிருக்க வேண்டும். அதை தவிர்த்துவிட்டு சேலத்தில் ஆடம்பரமாக மிகப்பெரிய கொண்டாட்டமாக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டிருந்தார்.
[முதல்வரின் புயல் சேத ஆய்வு பாதியிலேயே ரத்து.. காரணம் மழை!]
முதல்வர் செல்லவில்லை
கடந்த இரண்டு நாட்களாக ஏன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் செல்லவில்லை என்ற கேள்வியை அந்த எட்டு மாவட்டங்களில் உள்ள மக்களும், எதிர்க்கட்சிகளும் எழுப்பிய கேள்விக்கு பயந்து, ஐந்தாவது நாளாக இன்று எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டார். சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு, திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் ஏறி, குறிப்பிட்ட இரண்டு, மூன்று இடங்களுக்கு மட்டும் சென்று, அதுவும் ஆளும் கட்சிக்காரர்கள், அமைச்சர்கள் புடைசூழ, காவல்துறையினர் புடைசூழ, எங்கே முதல்வர்.. எங்கே முதல்வர்.. என்று மக்கள் கேட்டபோது, இங்கேதான் இருக்கிறார் என்று அதிகாரிகள் சுட்டிக் காட்டக் கூடிய நிலையில், எங்கே இருக்கிறார் என்று பார்க்க முடியாத நிலையில்தான் முதல்வர் ஒரு நாடகத்தை நடத்தி விட்டு திரும்பியுள்ளார்.
திரும்பிவிட்டார்
ஏற்கனவே பட்டியல் தயாரித்து வைத்திருந்த ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே, விளம்பரத்திற்காகவும், ஊடகங்களில் செய்தி வர வேண்டும் என்பதற்காகவும், உதவிகளை வழங்கிவிட்டு, திருச்சிக்கு திரும்பி, சென்னைக்கு வருகிறார்.
பதில்
எதிர்கட்சிக்காரர்களை பார்த்து கேள்வி கேட்கும் முதல்வரை, பார்த்து நான் கேட்கிறேன்.. முதல்வர் பதவியில் இருந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் இருந்ததற்கு என்ன காரணம்? அதற்கு முதலில் பதில் சொல்ல வேண்டும். அரசு அதிகாரிகள் மற்றும் எல்லா அமைச்சர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல முடியவில்லை. எந்த ஒரு முயற்சியிலும் அரசு ஈடுபடவில்லை.
தங்கியிருக்க வேண்டும்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள திமுக சட்டசபை உறுப்பினர்கள், அந்தந்த பகுதிகளுக்கு சென்று முடிந்த அளவுக்கு என்னென்ன சேதம் அடைந்துள்ளது என்பதை கணக்கெடுத்து கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும் செய்து வருகிறார்கள். திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை புயல் நிவாரணத்திற்கு வழங்குவார்கள். மழையால், முதல்வர் தனது ஆய்வை முடித்துக்கொண்டு, பாதியிலே திரும்பி வந்தார் என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், இன்று அவர் அங்கேயே தங்கியிருந்து பாதிப்புகளை நேரடியாக பார்த்திருக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.