கருணாநிதி கட்டிக்காத்த வாக்கு வங்கி அப்படியே இருக்கா.. ஸ்டாலினுக்கு மே 23-ல் அக்னி பரீட்சை!
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக எத்தனை இடங்களில் வெல்லும் என்பதை விட இத்தனை ஆண்டுகாலம் கட்டிக் காப்பாற்றப்பட்டு வந்த அக்கட்சியின் வாக்கு வங்கியின் நிலைமை என்ன என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாகும்.
தமிழகத்தில் திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் சுமார் 25% முதல் 30% வாக்குகள் நிரந்தரமானவை. ஒவ்வொரு தேர்தலின் போதும் இதில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாக நின்றது. ஆனால் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவின் வாக்கு வங்கியை அவர் நிலைநிறுத்திக் காட்டினார்.
வருடா வருடம் குறிப்பிட்ட நாளில் தவறாமல் சந்திக்கும் ரஜினி, பொன்ராஜ்.. ரகசியம் என்னவோ!
திமுக வாக்கு வங்கி
திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதற்கு என நிரந்தர வாக்கு வங்கி இருந்து வருகிறது. இந்த வாக்கு வங்கியை தமது வியூகங்களால் தக்க வைத்துக் கொண்டே வந்தார் கருணாநிதி.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்
தற்போது ஜெயலலிதா, கருணாநிதி என்கிற இரண்டு ஆளுமைகளும் இல்லை. இந்த இரு ஆளுமைகளும் இல்லாத நிலையில் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் அதிமுக, திமுக இரண்டுமே படுதோல்வியை அடைந்தன. சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் பெரும் வெற்றி பெற்றார். திமுக டெபாசிட்டையே பறிகொடுத்தது. ஆர்.கே.நகர் தேர்தலை கூட பணம் வாரி இறைக்கப்பட்ட காரணத்தை முன்வைத்து ஒதுக்கி வைக்கலாம்.
ஸ்டாலினுக்கு அக்னி பரீட்சை
தற்போதைய லோக்சபா தேர்தல் என்பது திமுக, அதிமுக இரண்டின் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்பதை பட்டவர்த்தமான போட்டுடைக்கப் போகிறது களம். அதுவும் திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் முன் உள்ள மிக முக்கியமான அக்னி பரீட்சைதான் இத்தேர்தல் களம். கருணாநிதி கால திமுகவைப் போல தாம் இல்லை என்பதை வேட்பாளர் தேர்வில் வெளிப்படுத்தியிருந்தார் ஸ்டாலின். அதாவது கட்சியின் குறுநில மன்னர்களான பெருந்தலைகளின் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் தருவது, தம் மகனுக்கு அதீத இடம் தருவது என்றெல்லாம் ஸ்டாலின் தன்னுடைய 'கிச்சன் கேபினெட்' பாதையில் பயணிக்கிறார்.
ஸ்டாலின் அணுகுமுறைகள் பாஸாகுமா?
அரசியலுக்கே தொடர்பில்லாத மருமகன் என்கிற ஒற்றை காரணத்துக்காக ஆகப் பெரும் இயக்கமான திமுகவை ஒப்படைத்திருகிறார் ஸ்டாலின். அத்துடன் திமுகவின் டெல்லி முகமாகவும் அவரை நியமித்தும் இருக்கிறார். இத்தகைய ஸ்டாலினின் அணுகுமுறைகளை அக்கட்சித் தொண்டர்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு இம்முறையும் திமுகவுக்கே வாக்களித்தார்களா? அல்லது தலைவருடன் கட்சி போய்விட்டது என விரக்தியின் உச்சத்துக்குப் போய் 'ஆர்.கே.நகர்' திமுகவினராக மாறிப் போய்விட்டார்களா? என்பதையெல்லாம் இந்த தேர்தல் முடிவுதான் காட்டப்போகிறது.
தமிழகத்தின் எதிர்காலம்
தமிழகத்தில் மதச்சார்பு அரசியலை வேர்பிடிக்க வைக்க பகீரத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு தோதாக அதிமுக எனும் மிகப் பெரும் கட்சி தன்னுடைய முதுகை அந்த சக்திகளுக்கு காட்டிக் கொண்டு நிற்கிறது. இந்த நிலையில் திராவிடர் இயக்கத்தின் ஒற்றை முகவரியாக இருக்கும் திமுக பெறப்போகும் வாக்குகள்தான் எதிர்கால தமிழகம் எந்த திசையை நோக்கி பயணிக்கும் என்பதை வெட்ட வெளிச்சமாக்கும்.