மத்திய அரசு குழுவ அப்புறம் பார்க்கலாம்.. முதல்ல மக்களுக்கு உதவி பண்ணுங்க.. அரசுக்கு ஸ்டாலின் அட்வைஸ்
சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைக்கவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசின் உதவிக்காகக் காத்திராமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை புறநகர் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
சேலம் டூ கடலூர்... புயல்-மழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஸ்டாலின் சந்திப்பு..!
பார்வையிட்டேன்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுளளதாவது:-
கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்டேன். இன்று திருவாரூர், நாகை மாவட்டங்களில் "புரெவி" புயல் - வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டதுடன், பாதிப்புக்கு ஆளாகியிருப்போருக்கு ஆறுதல் கூறி, அவர்களுடன் பேசினேன்.
விவசாயிகள் வேதனை
பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் நீர் சூழ்ந்தும்- 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் உள்ள வேளாண் பயிர்கள் மூழ்கியும்; விவசாயிகளும், மக்களும் துயரத்திலும், சோகத்திலும் மூழ்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தாளடிப் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிப் போகும் நிலையிலும், இளம் பயிர்கள் முற்றிலும் நாசமாகிவிடும் சூழலிலும் இருப்பதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
கோவிலில் வெள்ளம்
சாலைகள் பல தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால போக்குவரத்தும் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் தாராசுரம் - ஐராவதீஸ்வரர் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. பல இடங்களில் கரைகள் உடைந்து விவசாய நிலங்கள் எல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஊழல்தான் காரணம்
பல விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் எப்படி ஆகப்போகிறது என்று மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். ஆனால் இதுவரை அரசுத் தரப்பிலிருந்து உதவிகள் ஏதும் போய்ச் சேரவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.தூர்வாரும் பணிகளில் நடைபெற்ற ஊழலும், வெள்ளக்காடாகி நிற்கும் இந்த நிலைமைக்கு வித்திட்டுள்ளது.
ஈடுபாடு இல்லை
எதிர்க்கட்சி என்ற அளவில் மக்களுக்கு ஆறுதல் சொல்லி- நிவாரண உதவிகளை வழங்கினாலும்-, அரசு இயந்திரம் புயல் வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முழு வீச்சில் இறங்கி மீட்புப் பணிகளில் இதுவரை ஈடுபடவில்லை. அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் இந்த பணிகளில் தீவிரமாக ஈடுபடுவதாகத் தெரியவில்லை.
நடவடிக்கை வேண்டும்
மத்தியக் குழு வெள்ளச் சேதங்களைப் பார்வையிட வந்திருக்கிறது. இது வரை வந்த பல குழுக்கள் - பார்வையிட்டார்கள்; நிதி வழங்கப் பரிந்துரைத்தார்கள். ஆனால் தமிழகத்திற்குப் பேரிடர் நிதிகள் வந்ததா என்றால் கட்டாயம் இல்லை என்ற நிலைதான் நீடிக்கிறது. அந்த நிலை இந்த முறை திரும்பவும் தமிழ்நாட்டிற்கு நிகழக்கூடாது. அதனால் மத்தியக் குழுவிடம் உரிய முறையில் சேதங்களை விளக்கி- நிதி பெறுவதற்கு அ.தி.மு.க. அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை புறநகர் பாவம்
சென்னை புறநகர் பகுதிகள் இன்னும் கன மழை பாதிப்பிலிருந்து மீண்டதாகத் தெரியவில்லை. கழிவு நீர் நிற்பதால் சுகாதாரக் கேடுகளை இந்த கொரோனா காலத்தில் ஏற்படுத்தி வருகிறது. சென்னையுடன் இணைக்கப்பட்ட புறநகர்ப் பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் கடந்த பத்தாண்டுக் காலம் இந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சென்னை - புறநகரில் வசிப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஒதுக்கப்பட்ட நிதிகளைச் செலவு செய்திருக்கிறார்கள்; ஆனால் திட்டம் நிறைவேறவில்லை என்று வரும் செய்திகள் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.
உறுதுணையாக இருப்பார்கள்
எனவே, மத்திய அரசு நிதிக்காகக் காத்திராமல் - கடலூர், திருவாரூர், நாகபட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் விவசாயிகளுக்கும் உடனடியாக நிதியுதவி வழங்குவதற்கு தமிழக அரசின் சார்பில் முதற்கட்டமாக முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சேத மதிப்பீடுகளை உரிய முறையில் மத்தியக்குழுவிடம் எடுத்துச் சொல்வதோடு நின்று விடாமல் - மத்திய அரசிடம் உரிய நிதியைப் பெற்றிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தி.மு.க. எம்பிக்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
நடவடிக்கை தேவை
சென்னை- புறநகரில் போர்க்கால வேகத்தில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றவும், தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் அவசர நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.