திராவிட மாடல் 2.0 அரசில் லைன் கட்டும் திட்டங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஸ்டாலின் சர்ப்ரைஸ்
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். விளையாட்டுத்துறை சாதனை நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், தமிழ்நாடு அரசை போல வேறு எந்த மாநிலங்களிலும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கியதில்லை. திராவிட மாடல் 2.0 அரசில் திட்டங்கள் லைன் கட்டி வரும் என்று கூறியுள்ளார் [MK Stalin].
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் சாம்பியன் ஆஃப் தமிழ்நாடு என்கிற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. விளையாட்டு துறையில் தடம் பதித்த வீரர் வீராங்கனைகளை மேடையேற்றி பாராட்டினார்கள். இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஊக்கத் தொகையில் முன்னோடி
நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசுகையில், "உதயநிதி இந்த துறைக்கு கிடைத்தது உங்களுக்கு பல வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. துடிப்பாக செயல்பட்டு தமிழ்நாடு இளைஞர்களையும், விளையாட்டு வீரர்களையும் வளர்த்திருக்கிறார் உதயநிதி. இங்கிருக்கும் பலரை சாம்பியன்களை உருவாக்கும் திறமையான கேப்னடாக அவர் இருக்கிறார். அவருக்கும், துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள்.
விளையாட்டு வீரர்க்கள் இவ்வளவு தூரம் சாதிக்க நம் அரசுத் திட்டங்கள் தான் காரணம். கடந்த 4.5 ஆண்டுகளில் தேசிய, சர்வதேச அளவில் பதக்கம் வென்ற 5,406 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.170 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கும் மற்ற வீரர்களுக்கு இணையான ஊக்கத் தொகை வழங்கி வருகிறோம். இதிலும் நாம் தான் இந்தியாவுக்கே முன்னோடி.
நிதி உதவி
பன்னாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகள், தேசிய அளவிலான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையேயான போட்டியில் பதக்கங்கள் வென்ற 1,172 வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.37 கோடி உயரிய ஊக்கத் தொகை இன்று வழங்கப்படுகிறது. இதுவரை மொத்தம் 6,578 வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.211 கோடி ஊக்கத் தொகை வழங்கியுள்ளோம்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இப்படி ஊக்கத் தொகை வழங்கியதில்லை. 2023 ஆம் ஆண்டு நான் தொடங்கிய தமிழ்நாடு சாம்பியன் பவுண்டேசன் மூலமாக விளையாட்டு வீரர்களுக்கு தேவையாக உபகரணங்களை வாங்கவும், அவர்கள் சர்வதேச போட்டிகளில் பெற வெளிநாடு செல்ல 4,231 பேருக்கு ரூ.30 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
வெற்றி முக்கியம்
நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமை பெண், லேப் டாப் போன்ற திட்டங்கள் இளைஞர் மேம்பாட்டை அடிப்படையாக கொண்டவை. உதயநிதி விளையாட்டு வீரர்கள் வளர்ச்சிக்காக மெனக்கெடுகிறார். ஒரு போட்டியில் வென்றால் போதாது. ஒவ்வொரு போட்டியிலும் வெல்ல வேண்டும். மீண்டும் மீண்டும் வெற்றி பெற வேண்டும்.
உங்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்கும். நானும், உதயநிதியும் உங்களுக்கு தேவையான வளர்ச்சியை செய்து தர தயாராக இருக்கிறோம். படிக்கிற காலத்தில் கவன சிதறல்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். படிப்பும், விளையாட்டும் இரண்டு கண்களாக இருக்க வேண்டும். இதை விட சிறந்த மெடிடேஷன் இருக்கவே முடியாது. நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் நம் மாநிலமும் ஆரோக்கியமாக இருக்கும்.
திட்டங்கள் வரிசை கட்டும்
உங்கள் ஹெல்த் தான் இந்தியாவின் ஹெல்த். இளைஞர்கள் தான் வருங்கால முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியம். உங்களை பாதுகாப்பாக வளர்ப்பது தான் எங்கள் பெரிய பொறுப்பு. அடுத்து அமையவுள்ள திராவிட மாடல் 2.0 அரசில் திட்டங்கள் லைன் கட்டி வரும். நாங்களும் வென்று வருவோம். நீங்களும் வென்று வாருங்கள்" என்றார்












Click it and Unblock the Notifications