கேரளா ஸ்டோரி என்ற கேவலம்! திரை பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கணும்! கொந்தளித்த ஜவாஹிருல்லா!
சென்னை: கேரளா ஸ்டோரி என்ற கேவலமான திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
மக்களிடையே வெறுப்பையும் பதற்றத்தையும் விதைக்கும் நோக்கில் சங்பரிவாரத் தொழிற்சாலை, கேரளா ஸ்டோரி என்ற கேவலமான திரைப்படத்தை எடுத்துள்ளதாக கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''மே.5, 2023 அன்று வெளியிடப்பட உள்ளதாக கூறப்படும் கேரளா ஸ்டோரி திரைப்படம், முற்றிலும் பொய்யான, அபாயகரமான கட்டுக் கதையை உண்மைச் சம்பவம் என்ற போர்வையில் முன்வைக்கிறது.
சுதிப்தோஜன் என்பவர் இயக்கியுள்ள இத்திரைப்படத்தின் ட்ரைலர், மத்திய தணிக்கைத் துறையின் அனுமதி பெறாமல் வெளியிடப்பட்டிருப்பது தொலைக்காட்சி நெறியாளர் பி.ஆர்.அரவிந்தாக்ஷன் தொடுத்த தகவல் உரிமைச் சட்ட மனுவின் மூலம் தெரியவந்தது.
ஆனாலும் இப்படக்குழு மீது எவ்வித நடவடிக்கையையும் ஒன்றிய பாஜக அரசு எடுக்கவில்லை என்பது இத்தகைய கயமைப்படங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு செய்யும் ஒத்தாசையை வெளிப்படுத்துகிறது.
கேரள மாநிலம் பயங்கரவாதிகளுக்கு ஆள் சேர்க்கும் மையமாக உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவான முஸ்லிம் பெண்கள் தமது முஸ்லிமல்லாத தோழிகளை மயக்கி முஸ்லிம் ஆண்களைக் காதலிக்க வைக்கிறார்கள்.
பிறகு அவர்களை மதம் மாற்றி முஸ்லிம் ஆண்களுக்குத் திருமணம் செய்யவைத்து, சிரியா, ஆப்கன் ஆகிய நாடுகளில் இயங்கும் பயங்கரவாதக் குழுக்களிடம் அனுப்பி அடிமையாக்கி விடுகிறார்கள்.
இவ்வாறு இதுவரை 32000 கேரளப் பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு பயங்கரவாத இயக்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவை கேரள ஸ்டோரி என்ற கேடுகெட்டப் படம் முன்னெடுக்கும் கருத்துகள். இப்படத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் மிகக் கடுமையாகக் கண்டனம் செய்துள்ளார்.
முன்னாள் கேரளா முதலமைச்சர் உமன் சாண்டி மற்றும் முதுபெரும் மார்க்சிஸ்ட் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஆகியோரின் கருத்துகளை திரித்து படம் எடுத்திருக்கும் சுதிப்தோஜன் வெளிப்படையாகவே மதசார்பின்மைக்கு எதிரானவர் என்பது இப்படத்திலும் அம்பலமாகியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட மதத்தையும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கோட்பாட்டையும் இழிவு செய்யும் நோக்கத்திலும் சமூக நல்லிணக்கத்தோடு திகழும் சமூகத்தை மடைமாற்றம் செய்து பதற்ற நிலைக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடனும் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தையும் இதுபோன்ற பிற படங்களையும் திரையிடத் தமிழ்நாடு அரசு தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
நீதிமன்றங்கள் இத்தகைய படங்கள் மீது தாமாகவே முன்வந்து வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தான் பதற்றத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுபான்மை மக்களுக்கு தக்க பரிகாரமாக அமையும்.''












Click it and Unblock the Notifications