"குடித்து பழகியவர்களுக்கும், விற்று பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம்".. கமல் ஹாசன் காட்டம்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் கொரோனா பரவல் குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டது. இதன் காரணமாக மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஊரடங்கு காலத்தில் கடந்த மே 10 தேதி முதல் மாநிலத்திலுள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா குறைந்ததைத் தொடர்ந்து இன்று முதல் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
'சந்தர்ப்பவாதத்தின் உச்சம்.. மக்கள் நலனை சிந்திக்காமல் டாஸ்மாக் கடைகளை திறக்கமுடிவு..' சீமான் கண்டம்
டாஸ்மாக் கடைகள் திறப்பு
அதன்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களைத் தவிர்த்து சென்னை உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் எனக் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
18 புதிய கட்டுப்பாடுகள்
தற்போது மாநிலத்தில் 5200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 11 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள கடைகளில் இன்று முதல் மது விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக புதிய 18 கட்டுப்பாடுகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் காலை 10 முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கட்சிகள் விமர்சனம்
இருப்பினும், மாநில அரசின் இந்த முடிவை அதிமுக, பாஜக, நாம் தமிழர் என பல்வேறு கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலும் தமிழ்நாடு அரசின் இந்த முடிவை விமர்சித்துள்ளார். டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக பாஜக சார்பில் நேற்று போராட்டமும் நடைபெற்றது.
கமல் ட்வீட்
இது குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்வர் பார்த்துக் கொள்ளவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.