தேய்கிறதா மய்யம்.. மலர்கிறதா தாமரை... 3 கமல் வேட்பாளர்கள் பாஜகவுக்கு ஜம்ப்!
மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் 3 பேர் பாஜகவில் இணைந்தனர்
சென்னை: மக்கள் நீதி மய்யம் கூட தேய தொடங்கி உள்ளதா என தெரியவில்லை.. அக்கட்சியின் சார்பில் எம்பி தேர்தலில் போட்டியிட்ட 3 முக்கிய வேட்பாளர்கள் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர்.
நயினார் நாகேந்திரன் அன்று அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த சமயத்தில், "அதிமுகவில் இருந்து மட்டுமில்லை, திமுக தொண்டர்களும் பாஜகவில் இணைவார்கள்.
மற்ற கட்சி தொண்டர்களும் பாஜகவை நோக்கி வருவார்கள். அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது" என்று பலமுறை நம்பிக்கையாக சொல்லி வருபவர் பொன்.ராதாகிருஷ்ணன்.
கேரளாவில் பள்ளிகளை சுற்றி 50 மீட்டருக்கு ''ஜங்க் புட்கள்'' விற்கத் தடை...!
முக்கிய தலைவர்
தமிழக பாஜகவுக்கு இன்னும் தலைவராக யாருமே நியமிக்காத நிலையில், மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன்தான் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு வரும்நிலையில், கட்சியில் இணைப்பும் நிகழ்வு கூட இவரது முன்னிலையில்தான் நடந்து வருகிறது.
3 வேட்பாளர்கள்
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் 3 முக்கிய நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். அவர்கள், வெறும் உறுப்பினர்கள் கிடையாது.. மய்யம் சார்பாக கடந்த எம்பி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்.. அரக்கோணம் வேட்பாளர் ராஜேந்திரன், கிருஷ்ணகிரி வேட்பாளர் ஸ்ரீகாருண்யா, சிதம்பரம் வேட்பாளர் ரவி ஆகியோர்தான் கட்சி மாறி பொன்.ராதா முன்னிலையில் இணைந்துள்ளனர். இந்த தகவலை பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
இந்தி மொழி
அமித்ஷா இந்தி மொழி விவகாரம் அன்று தலைதூக்கிய சமயம், பொன்.ராதா செய்தியாளர்களை சந்தித்து இதை பற்றி பேசியிருந்தார். அபபோது, "நன்றி மறந்தவன் தமிழன். கொண்டாட தெரியாதவன் தமிழன். சமஸ்கிருதத்தைவிட, பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி பேசியதை தமிழர்கள் கொண்டாடவில்லை" என்று தெரிவித்திருந்தார்.
கமல் கருத்து
பொன்.ராதாவின் இந்த கருத்து குறித்து, அப்போதே கமலிடம் கருத்த கேட்கப்பட்டது. அதற்கு, "பொன்.ராதாகிருஷ்ணன் மொழி மாறிவிட்டார் என நினைக்கிறேன் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், மய்யத்தை சேர்ந்த 3 முக்கிய பிரமுகர்கள் பாஜவில் இணைந்துள்ளது திரும்பி பார்க்க வைத்துள்ளது.