அரசியலமைப்பு இயந்திரம் தோல்வி.. ஜனாதிபதி ஆட்சிக்கான நேரம்.. மணிப்பூர் கொடூரத்தால் கமல்ஹாசன் ஆவேசம்!
சென்னை: மணிப்பூர் கொடூரத்தால் ஜனநாயகம் சீர்குலைந்துவிட்டது, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கான சூழல் நிலவுகிறது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பைரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பெரும்பான்மையினரான மைத்தேயி இன மக்கள், தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்குமாறு கோரி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே 3ஆம் தேதி, மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் கலவரம் வெடித்தது.

மைத்தேயி இன மக்களுக்கும், குக்கி பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த 2 மாதங்களாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன. அதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். கலவரத்தை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டும், ஆங்காங்கே மோதல்கள் தொடர்ந்தன.
கலவரம் சற்று ஓய்ந்த நிலையில், கடந்த மே 4ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோ வெளியாகி மீண்டும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. மணிப்பூரில், ஒரு சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மற்றொரு சமூகத்தினர் நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக இழுத்துச் செல்வதாக வீடியோவில் பதிவாகி இருந்தது. மேலும், அப்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது. சபையை ஒத்தி வைத்து மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்திக்க, எதிர்கட்சிகளின் கூட்டணியான I.N.D.I.A கூட்டணி முடிவு செய்துள்ளது. மேலும் இந்தக் கூட்டணி எம்.பிக்கள் குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், மணிப்பூர் கொடூரத்தால் ஜனநாயகம் சீர்குலைந்துவிட்டது, அரசியலமைப்பு இயந்திரம் தோல்வியடைந்துவிட்டது. மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கான சூழல் நிலவுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் பணிகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தார் மநீம தலைவரும் நடிகருமான கமல்ஹாசன். அவர் அமெரிக்காவில் இருக்கும் படங்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், மணிப்பூர் கொடூரம் தொடர்பாக அவர் ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications