அரசு தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களே.. ‘All in one ஆப்’ வருது.. அமைச்சர் அறிவிப்பு!
சென்னை: அரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் என நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அமைப்புகள், தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய தேர்வுகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், அரசுத் தேர்வு விண்ணப்பதாரர்கள் எளிதாக விண்ணப்ப பணிகளை மேற்கொள்வதற்காக புதிய வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
சட்டப்பேரவையில் இன்று நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் விண்ணப்பதாரர்களுக்கு ஒருங்கிணைந்த செயலி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
TNPSC, TRB, TNUSRB உள்ளிட்ட அரசுப் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வுகளின் விண்ணப்பதாரர்களுக்காக பிரத்யேக கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும்.
தேர்வு அறிவிப்பு, பாடத்திட்டங்கள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றை இந்த கைபேசி செயலி மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், சான்றிதழ் சரிபார்ப்பையும் இந்த செயலி மூலமாகவே மேற்கொள்ளலாம்.
மாநில குடிமைப் பணி அலுவலர்களுக்கு ஆண்டுதோறும் இடைக்கால பயிற்சிகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேரவையில் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications