மழை நின்று 10 நாளாச்சு.. பிஎஸ்என்எல் படுத்தும்பாடு இருக்கே.. புலம்பும் சென்னை மக்கள்!
சென்னை: மிக்ஜாம் புயல் மழை காரணமாக சென்னை நகரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. இதில் செல்போன் சிக்னல்களும் துண்டிக்கப்பட்டன. தற்போது சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், சில நிறுவனங்களின் செல்போன் சேவை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக பிஎஸ்எஸ்என்எல் சிம் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு இன்னமும் சிக்கனல் பிரச்னை நீடித்து வருகிறது.
கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், அந்த அனுபவத்தை கொண்டு இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இருப்பினும் எண்ணூர் பகுதிகளில் மழைநீருடன் கச்சா எண்ணெய் கழிவுகளும் சேர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்ததால் இன்னமும் அப்பகுதி மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

ஒரே நாளில் 40 செ.மீ வரை மழை பெய்ததால்தான் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 100 மிமீ முதல் 1100 மி.மீதான். ஆனால் இதில் மூன்றில் ஒரு பகுதி மழை கடந்த 4ம் தேதி பெய்திருக்கிறது. எனவேதான் வெள்ளம் வடிய அதிக நாட்கள் ஆகியுள்ளன. வெள்ளத்தில் ஏராளமான பொருட்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. சுமார் 4 லட்சம் வாகனங்கள் சேதமடைந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதில் பெரும்பாலும் பைக்குகளும், ஆட்டோக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் சாமானிய மக்களின் வாழ்வில் கூடுதல் பொருளாதார சுமை ஏறியிருக்கிறது.
டிச.4ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரை சென்னை முழுவதும் செல்போன் இணைப்புகள் மற்றும் இன்ர்நெட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. எனவே மீட்பு பணிகளில் கடுமையான தாமதம் ஏற்பட்டது. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக செல்போன் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் குறிப்பிட்ட சில செல்போன் சேவைகள் மீண்டும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்கிற புகார் எழுந்திருக்கிறது.
குறிப்பாக பிஎஸ்என்எல் சிம் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரச்னை இன்னும் இருப்பதாக கூறியுள்ளனர். கடந்த 6ம் தேதியே ஏறத்தாழ அனைத்து செல்போன் நிறுவனங்களும் தங்களது முழு சேவையை வழங்க தொடங்கிவிட்டன. பிஎஸ்என்எல் நிறுவனமும் இணைய சேவையை வழங்கிவிட்டது. ஆனாலும் நேற்று வரை செல்போன் சிக்னல் பிரச்னைகள் தென் சென்னை பகுதிகளில் அதிகமாக இருந்திருக்கின்றன.
மறுபுறம், பிராட்பேன்ட் சேவைகள் நேற்றுதான் சீராகி இருக்கிறது. ஏர்டெல், பிஎஸ்என்எல் நிறுவனங்களின் பிராட்பேன்ட் சேவை கடந்த 10 நாட்களாக கடுமையாக பாதிப்பட்டிருந்தன. மேற்கு மாம்பலம், சூளை மேடு பகுதிகளில் நேற்றுதான் இந்த சேவை இயல்பு நிலைக்கு திரும்பியதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே பிஎஸ்என்எல் நிறுவனத்தை தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவை வரை பெற்றுவிட்டன. ஆனால் பிஎஸ்என்எல் இன்றுவரை 4ஜி சேவைக்கு போராடிக்கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு இறுதியில் 4ஜி சேவை குறிப்பிட்ட இடங்களில் வழங்கப்படும் என்றும், அடுத்த அண்டு முதல் இந்த சேவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று பிஎஸ்என்எல் தலைவர் பி.கே.புர்வார் சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications