வங்கக்கடலில் உருவானது ‛மோக்கா’.. இன்று மிகத்தீவிர புயலாக மாறுகிறது.. தமிழகம் பாதிக்குமா? அலர்ட்
சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நேற்று இரவு புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த ‛மோக்கா' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாற உள்ளது எனவும், தமிழகத்துக்கு பாதிப்பு உண்டா? இல்லையா? என்பது பற்றியும் வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் கோடை வெயில் வாட்டி வதைத்தது.பல மாவட்டங்களில் தினசரி வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை தாண்டியது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் மே துவக்கத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கியது.

இதனால் இயல்பு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரலாம் என கூறப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக கோடை மழை பெய்ய தொடங்கியது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை லேசானது முதல் மிதமானது வரை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் பிடியில் இருந்து மக்கள் தப்பித்துள்ளனர்.
வலுவடைந்த தாழ்வு மண்டலம்: இதற்கிடையே தான் வங்கக்கடலில் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி வங்கக் கடலில் கடந்த 8ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. அதன்பிறகு இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்தது. மேலும் புயல் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக கூறப்பட்டது.

உருவானது புயல்: அதன்படி நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்தமானின் போர்ட் பிளேயரில் இருந்து 520 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. இதையடுத்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவு புயலாக மாறியது. பொதுவாக ஒரு புயல் உருவானால் அதற்கு பெயர் சூட்டப்படுவது வழக்கம். அதன்படி இந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த 'மோக்கா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இன்று மிகதீவிர புயலாகும்: இது படிப்படியாக தீவிரமாகி வருகிறது. அதன்படி இனு்று காலை தீவிரப் புயலாகவும், நள்ளிரவில் மிகத் தீவிரப் புயலாகவும் வலுவடைய உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த தீவிரப்புயல் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலவ வாய்ப்புள்ளது. மேலும் தொடர்ந்து, வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி, மே 13 முதல் வலு குறைந்து, மே 14ம் தேதி காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையைக் கடக்கக் கூடும்.
தமிழகம் பாதிப்பு?: புயல் கரையை கடக்கும் சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 130 கிலோமீட்டர் வேகத்திலும் இருக்கும். இந்த புயலால், தமிழகத்தில் பாதிப்பு எதுவும் இல்லை என கூறப்படுகிறது. மேலும் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் மே 14ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை உயர்வு: இருப்பினும் கூட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பம் அதிகரிக்கும். அடுத்த 3 நாள்களுக்கு இயல்பான வெப்பநிலையை காட்டிலும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது. இதன்மூலம் அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பம் அதிகரிக்க உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: அந்தமான் கடல் பகுதி, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதி, தென் மேற்கு, மத்திய கிழக்கு, மத்திய மேற்கு, வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த 3 நாள்களுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications