அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. நேற்று சென்னையின் பல பகுதிகளில் திடீரென மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் சென்னை மட்டுமல்லாது 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு இருக்கும்" என எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் மழை குளிர்ச்சியான காலநிலையை உருவாக்கினாலும், சில இடங்களில் பலத்த சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சுமார் 600 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் சாய்ந்துள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில், மா, பலா, வாழை என, மூன்று வகை பழங்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதிகளில், வாழை விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகள் பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி வாழைகளை சாகுபடி செய்துள்ளனர்.
Recommended Video
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சூரைக்காற்றுடன் பெய்த திடீர் கனமழையால் 600 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் முற்றிலுமாக சாய்ந்தன. இதேபோல கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். கஜா புயல் பாதிப்பிலிருந்து முற்றிலும் மீளாத நிலையில் திடீரென ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு தங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அதேபோல சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications