கோவணத்துடன் தமிழ்நாட்டு விவசாயி ஓடி வந்தார்.. அவர் என் கையில் திணித்த 11 ரூபாய்.. கண் கலங்கிய மோடி!
சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழை விவசாயி ஒருவர் பற்றி கண்கள் கலங்க நெகிழ்ந்து போய் பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது தனது தமிழ்நாட்டு அனுபவங்கள் பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் பிரதமர் மோடி.

மறக்க முடியாத சம்பவம்:தமிழ்நாட்டில் உங்களுக்கு நடந்த மறக்க முடியாத சம்பவம் எது என பிரதமர் மோடியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "தமிழ்நாட்டில் ஏக்தா யாத்திரையில் பயணித்துக் கொண்டிருந்தபோது வயலில் இருந்து ஒரு விவசாயி கத்திக்கொண்டே ஓடி வந்தார். அவர் வெறும் கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
நில்லுங்க நில்லுங்க என்று கத்திக்கொண்டே ஓடி வந்த அந்த விவசாயி என் கையில் 11 ரூபாய் வைத்தார். அவர் பேசியது எனக்குப் புரியவில்லை. அருகில் இருந்த தமிழ் பேசத் தெரிந்த ஒரு பாஜக தொண்டரிடம் கேட்டேன். இது என்ன என்று கேட்டேன். அந்த விவசாயிக்கு நாங்கள் போகிற யாத்திரை என்ன என்று தெரியவில்லை.
கண் கலங்கிய மோடி: "நீங்க காஷ்மீர் போறதுக்கு என்னோட பங்களிப்பா வெச்சுக்கோங்க" என்று சொன்னார். காஷ்மீர் தான போறீங்க என்றார். அவருக்கு நாங்கள் காஷ்மீர் வரை யாத்திரை போகிறோம் என்பது மட்டும் தெரிந்தது. அதற்கு அவர் தனது கையில் இருந்த 11 ரூபாயை கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அப்போது அவருக்கு என்ன மாதிரியான உணர்வு இருந்திருக்க வேண்டும்.
அந்த ஏழை விவசாயி தன் வயலில் வெறும் கோவணம் மட்டும் தான் கட்டி இருந்தார். அவர் என்னிடம் அந்த காசை கொடுத்தார். இது போன்ற உணர்வுப் பூர்வமான சம்பவங்கள் எனக்கு தமிழ்நாட்டில் நடந்துள்ளது. சொல்லிக்கொண்டே போகலாம்" என உருக்கமாகக் கண் கலங்கியபடி பேசியுள்ளார் பிரதமர் மோடி.
ஏக்தா யாத்திரை: 1991 ஆம் ஆண்டில் ஏக்தா யாத்ரா என்ற பெயரில் பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் நாடு தழுவிய யாத்திரை நடத்தப்பட்டது. கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை இந்த யாத்திரை நடைபெற்றது. இந்த யாத்திரையின் முக்கிய ஒருங்கிணைப்பாளராக நரேந்திர மோடியும் பணியாற்றி இருந்தார்.
இந்நிலையில் தான், அந்த யாத்திரையின்போது தமிழ்நாட்டில் நடந்த நிகழ்ச்சி எனக் கூறி ஏழை விவசாயி தன்னிடம் நிதியாக 11 ரூபாயை அளித்தது பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
தமிழ்நாட்டில் மோடி: மேலும், தமிழ்நாட்டுக்கு உங்களின் முதல் பயணம் நினைவிருக்கிறதா என நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, "கிட்டத்தட்ட 50 வருடங்களாக தமிழ்நாட்டுக்கு வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறேன். நாடெங்கும் சுற்றும் ஆர்வத்தில் எல்லா மாநிலங்களுக்கும் சென்றபோது தமிழ்நாட்டுக்கும் அடிக்கடி வந்திருக்கிறேன்.
கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தபோது கன்னியாகுமரி உட்பட பல இடங்களுக்கு வந்திருக்கிறேன். விவேகானந்தர் பாறையில் கட்டுமான பணிகள் நடக்கும்போது நான் அங்கு வந்திருக்கிறேன். முக்கியமாக, 1975ல் இந்திரா காந்தி அம்மையார் எமெர்ஜென்சி கொண்டு வந்தபோது நான் தலைமறைவாக அண்டகிரவுண்டில் இருந்து வேலை செய்ய வேண்டியிருந்த காலம்.
கட்சி சார்ந்த சில ஒருங்கிணைப்பு பணிகளுக்காக பல ஊர்களுக்கு சென்றிருக்கிறேன். அப்போது தமிழ்நாட்டுக்கும் வந்திருக்கிறேன். எமெர்ஜென்சி முடிந்த பிறகு, அந்த நேரத்தில் மக்கள் நடத்திய போராட்டங்கள், எதிர்ப்புகளை தொகுக்க ஒரு முடிவு செய்திருந்தோம். இதற்காக நாடு முழுவதும் பயணித்து பல தலைவர்களை சந்தித்தேன். அந்த வேலைக்காக தமிழ்நாட்டில் பல நாட்கள் தங்கி இருந்து உள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications