இங்கு 'வெற்றிவேல் வீர வேல்'... அங்கு 'சாமியே சரணம் ஐயப்பா'... வொர்க் அவுட் ஆகுமா பாஜக வியூகம்
சென்னை: தமிழகத்தில் வெற்றிவேல் வீர வேல் என்றும் கேரளாவில் சாமியே சரணம் ஐயப்பா என்றும் முழங்கி தனது பிரசார உரையை பிரதமர் மோடி தொடங்கிய வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் வரும் மே 2ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன
வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் தேர்தல் பிரசாரத்தை அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேசிய தலைவர்கள் பலரும் தேர்தல் மாநிலங்களில் முகாமிட்டு பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
மோடி பிரசாரம்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில வாரங்களாகவே பாஜக வேட்பாளர்களை ஆதரித்துத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.முதலில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பிரசாரத்தை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சில நாட்களாக தென் மாநிலங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.
வெற்றி வேல் வீர வேல்
கடந்த வியாழக்கிழமை தமிழகம் வந்த நரேந்திர மோடி, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். வேட்டி, சட்டையுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் அட்டகாசமான ஒரு விசிட் அடித்தார். முன்னதாக தேர்தல் பிரசாரத்தில் பேசும் போது, பிரதமர் மோடி, "வெற்றி வேல் வீர வேல்" என்று முழங்கியே தனது பேச்சை தொடங்கினார். மோடியின் முழக்கத்தைக் கேட்டு கூட்டத்தில் இருந்தவர்களும் "வெற்றி வேல் வீர வேல்" என்று பதிலுக்கு முழங்கினர்.
மதுரை வீரன்
மேலும், எம்ஜிஆர் நடிப்பில் 1956ஆம் ஆண்டு வெளியான மதுரை வீரன் திரபடத்தை யாராலும் மறக்க முடியாது என்றும் சிலாகித்துப் பேசினார். அதன் பின் அட்டாக் மோடிற்கு சென்ற அவர், காங்கிரஸ் - திமுக கூட்டணி ஊழல் கூட்டணி என்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை விதித்தற்குக் காங்கிரஸ் - திமுக கூட்டணி வெட்கப்பட வேண்டும் என்றும் கடுமையாகத் தாக்கி பேசினார்.
சாமியே சரணம் ஐயப்பா
அதைத்தொடர்ந்து நேற்று மோடி கேரளாவில் பிரசாரம் செய்தார். அங்குப் பிரதமர் மோடி, "சாமியே சரணம் ஐயப்பா" என்று கூறி தனது பிரசாரத்தை தொடங்கினார். பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்கக் கோயிலுக்கு வருவார்கள். அந்த ஒழுக்கமும் பக்தியும் இந்த நிலத்தை இன்னும் புனிதமாக்குகின்றன. இப்படியொரு புனித இடத்திற்கு வரும் பக்தர்களை மலர்களைக் கொண்டு வரவேற்பதற்குப் பதிலாக 2018இல் இடதுசாரிகள் லத்திகளைக் கொண்டு வரவேற்றனர் என்றும் தாக்கி பேசினார்.
கடும் முயற்சி
தமிழகத்தில் பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் இல்லை. இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பாஜக தேர்தலில் போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல கேரளாவில் ஒரே ஒரு எம்எல்ஏ மட்டுமே பாஜகவைச் சேர்ந்தவர். அங்கு இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் மட்டும் பிரதான போட்டி. அந்த இரு கட்சிகளுக்கு மத்தியில் மூன்றாவது கட்சியாக உருவெடுக்க பாஜக முயல்கிறது.
காரணம் என்ன
இருப்பினும், தற்போது வரை வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகளில் பாஜகவுக்குச் சாதகமாக எந்தவொரு முடிவும் வரவில்லை. இது பாஜகவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்துக்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் திருப்ப பாஜக இப்படி கடுமையாக முயல்கிறது.
ஜெய் ஸ்ரீராம்
முன்னதாக கடந்த வாரம் மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்த நரேந்திர மோடி, அங்கு மம்தா பானர்ஜியை கடுமையாகத் தாக்கி பேசினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் மேற்கு வங்கத்திற்கு வளர்ச்சி ஏற்படவில்லை என்று விமர்சித்தார். அங்கு அவர் தனது உரையின்போது, 'ஜெய் ஸ்ரீராம்' என்று முழங்கியது குறிப்பிடத்தக்கது.