சீனர்களைக் கவர்ந்த தமிழர்கள்.. மாமல்லபுரத்தை தேர்வு செய்தது யார் தெரியுமா?
Recommended Video
சென்னை: மாமல்லபுரத்தில் மோடி - ஜின்பிங் மீட்டிங்கை வைக்கலாம் என்று ஆலோசனை கொடுத்தது யார் தெரியுமா.. சத்தியமாக பிரதமர் மோடி இல்லையாம்.. மாறாக சீனாதான் இந்த யோசனையைத் தெரிவித்ததாம்.
மொத்த மாமல்லபுரமும் ஜிலுஜிலுவென தயாராகியுள்ளது இந்திய பிரதமரையும், சீன அதிபரையும் வரவேற்று உபசரிக்க. ஊரையே மாற்றியமைத்துள்ளனர் அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும். மொத்த மாமல்லபுரமும் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் எத்தனையோ இடங்கள் இருக்க மாமல்லபுரத்தை ஏன் இந்த சந்திப்புக்குத் தேர்ந்தெடுத்தனர் என்று பலரும் யோசித்துக் கொண்டுதான் உள்ளனர். தமிழகத்திற்கும், சீனாவுக்கும் இடையிலான தொடர்புகள் ஆதி காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது. அத்தகைய தொன்மையான உறவைக் கொண்டவை தமிழ்நாடும், சீனாவும்.
பல்லாயிரம் ஆண்டுகால தமிழ்நாடு- சீனா உறவு... கொட்டிக் கிடக்கும் சான்றுகள் இங்கே!
சரித்திர நகரம்
இது இந்தியாவின் இதரப் பகுதியினருக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஆனால் இந்த தொன்மையை சீனா நன்கு உணர்ந்துள்ளது. அதை விட முக்கியமானது, மாமல்லபுரத்தை தேர்வு செய்ததே சீனாதானாம். சீனாதான் மாமல்லபபுரத்தில் சந்திப்பை மேற்கொள்ளலாம் என்று இந்தியாவிடம் தெரிவித்ததாம். இதை இந்தியா உடனடியாக ஏற்றுக் கொண்டதாம்.
சீனாவின் தேர்வு
சீன துணை வெளியுறவு அமைச்சர் லுவோ சாஹோயி தான் மாமல்லபுரத்தை தேர்வு செய்துள்ளார். இவர் முன்பு இந்தியாவுக்கான சீன தூதராக இருந்தவர் ஆவார். அதை விட முக்கியமானது, புதுச்சேரி அருகே உள்ள சர்வதேச நகரமான ஆரோவில் நகரில் இவர் தங்கிப் படித்துள்ளார். பல வருடங்கள் ஆரோவில்லில் தங்கியிருந்தவர்.
சீனா உணர்ந்த முக்கியத்துவம்
எனவே இவருக்கு மாமல்லபுரம் குறித்து நன்கு தெரிந்துள்ளது. மேலும் மாமல்லபுரத்தின் சரித்திர முக்கியத்துவம், சீனத் தொடர்புகளும் இவருக்கு புரிந்ததால், இவர்தான் மாமல்லபுரத்தை டிக் செய்துள்ளார்.
தமிழர்களின் பெருமை
பாஜகவைப் பொறுத்தவரை மாமல்லபுரத்தை பாஜகவுக்கு சாதகமாக தமிழகத்தை மாற்ற பயன்படும் களமாக தோன்றியிருக்கலாம். ஆனால் சீனத் தரப்போ, தமிழ்நாட்டின் பாரம்பரியம், தொன்மை, சீனாவுடன் தமிழ்நாடு வைத்திருந்த சரித்திர தொடர்புகள், வர்த்தகத் தொடர்புகள் உள்ளிட்டவை தொன்மைதான் கண்ணுக்குப் பட்டுள்ளது. இதனால்தான் அவர்கள் மாமல்லபுரத்தை தேர்வு செய்துள்ளனர்.
எப்படியோ தமிழ்நாட்டின் பெருமையை சீனர்கள் நன்கு உணர்ந்துள்ளது மகிழ்ச்சிதான்.