பண பலன்கள் வழங்க கோரி ஆசிரியர் தொடர்ந்த வழக்கு: பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜர்
சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பணப்பலன் வழங்காததை எதிர்த்து ஓய்வு பெற்ற ஆசிரியர் தொடர்ந்த வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து, 1993-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், பணப்பலன்களை வழங்கக் கோரி ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வழக்குகளில், மனுதாரர்களுக்கு பண பலன்களை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளில், வெவ்வேறு அமர்வுகள், வெப்வேறு தீர்ப்புகளை வழங்கியதால், வழக்குகள் மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இதனை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு, 1993-ம் ஆண்டின் அரசாணையை அனைத்து இடை நிலை ஆசிரியர்களுக்கும் 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அமல்படுத்த வேண்டும் என்றும், 2016-ம் ஆண்டுக்கு பிறகு பணப் பலன்கள் கோரும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது எனவும் உத்தரவிட்டது. இதனிடையே, இந்த உத்தரவுப்படி தமக்கு பண பலன்கள் வழங்கவில்லை எனக்கூறி ஹரிஹரன் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனிடையே, இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரதசக்கரவர்த்தி அமர்வு, பணப்பலன் வழங்காதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், பள்ளிக்கல்வி துறை ஆணையர் நந்தகுமார் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஓய்வுபெற்ற ஆசிரியர் ஹரிஹரனுக்கு ஓய்வூதியத்தை கணக்கிட்டு வழங்குவது தொடர்பாக நேற்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது" எனக் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "உத்தரவு பிறப்பித்தால் மட்டும் போதாது; எப்போது மனுதாரருக்கு பணப்பலன் வழங்கப்படும்" எனக் கேள்வியெழுப்பினர்.
இதற்கு, இரு வாரங்களில் பணம் மனுதாரரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், மனுதாரரை மிரட்டுவதாக அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார் தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதிகள், இது மிகவும் தீவிரமான பிரச்சினை எனக் கூறினர்.மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications