சென்னை விமான நிலையத்தில் சுற்றித் திரியும் குரங்குகள், நாய்கள்! பயணிகள் அவதியுறுவதாக புகார்!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் நாய்கள் சுற்றித் திரிவதை தொடர்ந்து இப்போது குரங்குகளின் அட்டகாசங்களும் ஆரம்பித்துள்ளன.
சென்னை ஏர்போர்ட்டை பொறுத்தவரை பயணிகள் எண்ணிக்கை, விமான சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூடுதலாக உள்நாட்டு முனையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் எதிர்கால நலன் கருதி சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் சரக்குகளை கையாள்வதில் மும்பை, டெல்லி விமான நிலையங்களுக்கு அடுத்தப்படியாக நாட்டிலேயே மூன்றாவது பெரிய விமான நிலையம் என்ற சிறப்பை சென்னை விமான நிலையம் பெற்றிருக்கிறது. நாளொன்றுக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் விமானப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டொன்றுக்கு சராசரியாக 2 கோடி விமானப் பயணிகளை கையாள்கிறது சென்னை விமான நிலையம். அதேபோல் தினமும் சென்னை விமான நிலையத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடு என எல்லா முனையங்களில் சேர்த்தும் 400 முதல் 500 விமானங்கள் வந்து செல்கின்றன.
இதனால் எப்போதுமே சென்னை விமான நிலையம் பரபரப்பாக காணப்படும். இந்தச் சூழலில் பயணிகளை அச்சுறுத்தும் வகையிலும், அசவுகரியம் கொடுக்கும் வகையில் அங்கு நாய்கள் சுற்றித் திரிவதாக புகார் எழுந்த நிலையில் இப்போது கூடுதலாக விமான நிலைய மேற்கூரைகளில் குரங்களும் அட்டகாசங்கள் செய்வதாக புகார் வந்துள்ளது. சென்னை அப்டேட்ஸ் என்ற சமூக வலைதளப் பக்கங்களில் இது தொடர்பான புகார் புகைப்படம் மற்றும் வீடியோவுடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய உயர் அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோள்களும் எழுந்துள்ளன.

பெங்களூர் விமான நிலையம் கார்டன் போன்று இருப்பதாகவும் சென்னை விமான நிலையம் ஜூ போன்று இருப்பதாகவும் அந்த சமூக வலைதளப் பக்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தின் கார் பார்க்கிங் மற்றும் ஆள் அரவமற்ற பகுதிகளில் தான் நாய்கள் அதிகம் உள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதனால் விலங்குகள் நல ஆர்வலர்களும், புளு கிராஸ் அமைப்பினரும் தன்னார்வமாக நாய்களையும், குரங்குகளையும் விமான நிலையத்திலிருந்து பிடித்துச்செல்ல முன் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பயணிகளிடையே எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications