சென்னையில் 3 புதிய மேம்பாலங்கள்.. வேளச்சேரி, நுங்கம்பாக்கம், அண்ணா நகர் மக்களுக்கு குட்நியூஸ்
சென்னையில் புதிதாக மூன்று மேம்பாலங்கள் கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி ஆயத்தமாகி வருகிறது. சென்னையில் நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணா நகர் 3வது அவின்யூவில் மேம்பாலம் கட்டுவதற்கு விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதேபோல் தென் சென்னையில் வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை ஜங்ஷனில் இருந்து குருநானக் கல்லூரி ஜங்ஷன் வரை மேம்பாலம் கட்டுவதற்கும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையில் முக்கியமான அத்தனை சிக்னல்களும் மேம்பாலங்களாக மாறிவிட்டன. சென்னையில் எத்தனை மேம்பாலங்கள் உள்ளது என்பதை எண்ணவே முடியாது. அந்த அளவிற்கு மேம்பாலங்கள் இருக்கிறது. சில இடங்களில் மேம்பாலங்கள் கட்ட முடியாத நிலை இருந்ததால், மேம்பாலங்கள் அமைக்கப்படாமல் உள்ளது. சில இடங்களில் மேம்பாலங்கள் அமைத்தால் மாற்றுப்பாதைஇல்லை என்பதால், மேம்பாலமே அமைக்காமல் அரசு தவித்து வருகிறது. இந்த காரணங்களால் மட்டுமே தற்போது சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

அப்படி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் பகுதிகளையும் எண்ணவே முடியாது என்பது தான் கசப்பான உண்மை.. ஏனெனில் கடந்த 20 வருடங்களில் வாகன நெருக்கம் சென்னையில் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு வளர்ந்து விட்டது. சென்னையில் குறிப்பாக சில இடங்களை சொல்வது என்றால், அண்ணா சாலையில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை, நந்தனம் முதல் திநகர் பேருந்து நிலையத்தை கடந்து நுங்கம்பாக்கம் நோக்கி செல்லும் சாலை, அண்ணா மேம்பாலம், நெல்சன் மாணிக்கம் ரோடு, ஈக்காட்டுதாங்கல்,வேளச்சேரி செக் போஸ்ட், அண்ணா நகர் 3வது அவின்யூ, பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை, பள்ளிக்கரணை வேளச்சேரியை இணைக்கும் கைவேலி சிக்னல், பள்ளிக்கரணை பிரதான சாலை, திருவான்மியூர் டைட்டில் பார்க், சோழிங்கநல்லூர் சந்திப்பு, பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை , அனகாபுத்தூர் சாலை சந்திப்பு என பல இடங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.. இதில் அண்ணாசாலை, திநகர் உள்பட சில இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டும் வருகின்றன.
இந்நிலையில் நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணா நகர் 3வது அவின்யூ, வேளச்சேரி 100 அடி சாலை சிக்னல் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. இதில் வேளச்சேரியை பொறுத்தவரை ஒருபுறம் 100 அடி ரோடு, மறுபுறம் வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் ஆகியவற்றில் தொடங்கி ஃபீனிக்ஸ் மால் வழியாக வேளச்சேரி செக் போஸ்ட் வரை வாகன நெருக்கடி மிகமிக அதிகம். பீக் ஹவர்களில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும்.
வேளச்சேரி செக் போஸ்ட்டை தாண்டி விட்டால் ராஜ்பவன் செல்பவர்களும், கிண்டி ரயில் நிலையம் செல்பவர்களும் பரிதவித்து போவார்கள். இதற்கு தீர்வு காணும் வகையில் ஐந்து பர்லாங் சாலை ஜங்ஷனில் இருந்து குருநானக் கல்லூரி ஜங்ஷன் வரை மேம்பாலம் ஒன்றை கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க வேண்டும். இதையொட்டி சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியிருக்கிறது.
சென்னையில் நெல்சன் மாணிக்கம் சாலைமற்றும் அண்ணா நகர் 3வது அவின்யூவில் மேம்பாலம் கட்டுவதற்கு விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது. விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் இதில் நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையை பொறுத்தவரை, பாலம் கட்ட ஆரம்பித்தால், நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் தொடங்கி பூந்தமல்லி ஹைரோடு வரை மாற்று வழி என்பது மிகவும் சவாலானதாக இருக்கும். ஏனெனில் சாலை என்பது மிகவும் குறுகியதாக இருக்கும். அதேபோல் அண்ணா நகர் 3வது பிரதான சாலை என்பது அதிக நெரிசல் உள்ள பகுதியாகும். இங்குமே மாற்றுவழிகள் தான் சவாலானதாக இருக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications