சென்னை விமான சாகசம்.. 230 பேருக்கு நீர்ச்சத்து குறைபாடு.. ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட வழியில்லை
சென்னை: விமானப்படை ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த விமான சாகசத்தை கண்டுகளிக்கச் சென்ற 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நீர்ச்சத்து குறைபாட்டால் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட வழியில்லாததால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் ஆத்திரமடைந்தனர்.
இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதைப் பார்ப்பதற்காக சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். இந்த நிகழ்வு லிம்கா கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.

விமானப் படை வீரர்கள் வானில் பல வர்ண ஜாலங்களை நிகழ்த்தினர். சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை வான் சாகசங்களை கண்டு வியந்தனர். வான் சாகசங்களுக்குத் தமிழிலேயே பெயர் வைக்கப்பட்டதும் மக்களைப் பெரிய அளவில் கவர்ந்தது. இந்த நிகழ்வால் சென்னை மாநகரம் முழுவதும் ஸ்தம்பித்தது. பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நடந்து செல்வதற்கு கூட மக்கள் சிரமப்பட்டனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். காவல்துறையும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தாலும் ஏற்பாடுகள் மிக மோசமாக இருந்ததாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. அடிப்படைத் தேவைகளான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். இதற்கிடையே சென்னையில் விமானப் படை சாகச நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்ற ஜான் என்ற 60 வயதான நபர் உயிரிழந்தார்.
அவர் மயங்கியதை அருகே இருந்தவர்கள் பார்த்துள்ளனர். இருப்பினும், அப்போது அங்கு டிராபிக் மோசமாக இருந்ததால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸுக்கு அழைத்துள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸ் சிறிது நேரம் கழித்தே வந்துள்ளது. மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் அந்த வாகனம் ஊர்ந்து சென்றே ஓமந்தூரார் மருத்துவமனையை அடைந்தது. அங்கு அந்த நபருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார்.
ஐஎன்எஸ் அடையாறு அருகே நின்று வான் சாகச நிகழ்ச்சியைப் பார்த்தவர் மயக்கமடைந்து உயிரிழந்தார். மயக்கமடைந்த நபர் திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தினேஷ்குமார் (வயது 37) என்பவர் உயிரிழந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, பெருங்களத்தூரை சேர்ந்த சீனிவாசன் என்பவரும் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் உயிரிழப்பு 4 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே வான் சாகச நிகழ்ச்சியைப் பார்வையிடுவதற்காக வந்த 230 பேருக்கு நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 40 ஆம்புலன்ஸ் மூலமாக 93 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட வழியில்லாததால் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் கடும் ஆத்திரமடைந்தனர்.












Click it and Unblock the Notifications