போலி சான்றிதழ் தந்து, தமிழகத்தில் மத்திய பணிகளில் சேர்ந்த வட மாநிலத்தவர்கள்! பலநூறு பேர் பகீர் மோசடி
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பணிகளில் போலி சான்றிதழ் கொடுத்து வடமாநிலத்தவர்கள் பணிக்கு சேர்ந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசு பணிகளை பொதுவாக வடமாநிலத்தவர்கள் அபகரிப்பது அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் ரயில்வே பணிகள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்களில் வடஇந்தியர்கள் பலர் பணிக்கு சேர்வது தொடர்ந்து நடந்து வருகிறது.
முக்கியமாக தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் நியமிக்கப்படாமல் தொடர்ந்து வடஇந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டும் வருகிறது.

தமிழர்கள் புறக்கணிப்பு
இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பலர் கோரிக்கைகளை வைத்தும் கூட எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதோடு சில வடஇந்தியர்கள் ஏற்கனவே பொய்யான சான்றிதழ்களை கொடுத்து பணிக்கு சேர்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது மேலும் பல வடஇந்தியர்கள் பொய்யான சான்றிதழ்களை கொடுத்து தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பணிகளில் பணிக்கு சேர்ந்தது அம்பலம் ஆகி உள்ளது.

பொய்யான சான்றிதழ்
அஞ்சல் துறை, சிஆர்பிஎப், இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் போலி சான்றிதழ் கொடுத்து இவர்கள் பணிக்கு சேர்ந்துள்ளனர். முக்கியமாக ரயில்வே துறையில் பலர் இப்படி சேர்ந்துள்ளனர். அதன்படி வடஇந்திய இளைஞர்கள் பொய்யாக தமிழ்நாட்டில் படித்தது போல சான்றிதழ் கொடுத்துள்ளனர். தமிழ்நாடு தேர்வு துறைக்கு கீழ் வரை பள்ளிகள், கல்லூரிகளில் படித்தது போல இவர்கள் பொய்யான சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

எப்படி நடந்தது?
இந்த நிலையில் மத்திய பணிகளில் இவர்கள் சேர்ந்த பின் மதிப்பெண் சான்றிதழ் சரி பார்ப்பு பணிக்காக மத்திய தேர்வு ஆணையம் மாநில அரசின் தேர்வு ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது. இவர்களின் சான்றிதழ்களை அனுப்பி சரி பார்க்க கோரிக்கை விடுத்தது. அந்த சான்றிதழ்களை சரி பார்த்த போது வடஇந்தியர்கள் பலர் பொய்யான சான்றிதழ் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு பள்ளிகளில் படித்தது போன்று போலி சான்றிதழ் கொடுத்து இவர்கள் மத்திய பணிகளில் சேர்ந்தது அம்பலம் ஆகியுள்ளது.

சோதனை அம்பலம்
இதையடுத்து பொய்யான சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தேர்வாணையம் பரிந்துரை செய்துள்ளது. மொத்தம் ஒருவர், இருவர் அல்ல மொத்தம் 250 பேர் வரை இப்படி பொய்யான சான்றிதழ் கொடுத்து தமிழ்நாட்டில் பணிக்கு சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் வேலை இல்லாமல் இருக்கும் போது வடஇந்தியர்கள் பொய்யான சான்றிதழ் கொடுத்து, எந்த கல்வி அறிவும் இல்லாமல் மத்திய பணிகளில் சேர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications