ம.பி.யில் 8.9 கோடி மக்கள்- 29 எம்பிக்கள்.. தமிழ்நாட்டில் 7.2 கோடி- 39 எம்பிக்கள் கிடைத்தது எப்படி?
சென்னை: அதிக இடங்களை வைத்துக்கொண்டு தமிழ்நாடு எப்படிப் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருக்க முடியும்? அநீதி இழைக்கப்பட்டது வட மாநிலங்களுக்குத்தான் என்று பாஜக ஆதரவாளர் ரன்தீப் சிசோடியா என்பவர் கூறியிருந்தார். இந்நிலையில் 1961-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மக்கள் தொகையை ஒப்பிட்டு, ஏன் வடமாநிலங்களில் மக்கள் தொகை அதிகம் என்றாலும், சீட் குறைவாக உள்ளது என்பதை திமுக ஆதரவாளரான டான் அசோக் பதிலடி கொடுத்துள்ளார். அந்த பதிவினை பார்ப்போம்.
பாஜக ஆதரவாளர் ரன்தீப் சிசோடியா என்பவர் வெளியிட்டிருந்த பதிவில், "அந்த பதிவில் மத்திய பிரதேசத்தில் 8.9 கோடி மக்கள் வசிக்கிறார்கள் 29 எம்பிக்கள் தான் இருக்கிறார்கள். ராஜஸ்தானில் 8.2 கோடி மக்கள் இருக்கிறார்கள்.. ஆனால் 25 எம்பிக்கள் தான் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் 7.2 கோடி மக்கள் தான் இருக்கிறார்கள்.. அதற்கு 39 எம்பிக்கள் இருக்கிறார்கள்.

எனவே மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானை விடக் குறைவான மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டிற்கு, ஏன் 39 தொகுதிகள் (அதிக இடங்கள்) உள்ளன? இது வட மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா?. மாநில சுயாட்சி மற்றும் மத்திய அரசுடனான உறவு குறித்துப் பேசும் திமுக, இந்த அதிகப்படியான இடங்களை வைத்துக்கொண்டு "தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது" என்று சொல்வது தவறு. பழைய விவகாரங்களைப் பேசாமல், கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் நடந்ததாக அவர் கருதும் ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்குப் பதில் சொல்லுங்கள் " இவ்வாறு கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த திமுக ஆதரவாளர் டான் அசோக் வெளியிட்ட பதிவில், இது அப்பட்டமான முட்டாள்தனம்.
1961-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி:
தமிழ்நாடு (அன்றைய மெட்ராஸ் மாநிலம்): 3.37 கோடி
மத்தியப் பிரதேசம்: 3.24 கோடி
ராஜஸ்தான்: 2.12 கோடி
இன்று:
தமிழ்நாடு: 3.37 கோடி → 7.6 கோடி (சுமார் 126% அதிகரிப்பு)
மத்தியப் பிரதேசம்: 3.24 கோடி → 8.8 கோடி (சுமார் 172% அதிகரிப்பு)
ராஜஸ்தான்: 2.12 கோடி → 8.2 கோடி (சுமார் 287% அதிகரிப்பு)
இந்தியா முழுவதிலும், 1961-ஆம் ஆண்டிலிருந்து மக்கள் தொகை சுமார் 220% வளர்ந்துள்ளது.
நாட்டின் மக்கள் தொகை கட்டுப்பாட்டுக் கொள்கைகளை மற்ற பல மாநிலங்களை விடச் சிறப்பாகப் பின்பற்றியதன் காரணமாகவே, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் பங்கு 7.7%-லிருந்து சுமார் 6.0%-ஆகக் குறைந்துள்ளது.
ஆகவே இப்போது சொல்லுங்கள்; மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியும், சமூக மேம்பாட்டுக் குறியீடுகளை உயர்த்தியும் நாட்டிற்காக உண்மையில் யார் கடினமாக உழைத்தார்கள்?
அந்த 29 + 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்தனை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்? - ஒன்றுமே இல்லை!
தமிழ்நாடு தனது கருவுறுதல் விகிதத்தைக் குறைத்தது; சுகாதார வசதிகளை மேம்படுத்தியது; எழுத்தறிவு விகிதத்தை உயர்த்தியது; வேலைவாய்ப்புகளை உருவாக்கியது; தனது பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தது.
அனைத்து வளங்களும் சாத்தியக்கூறுகளும் இருந்தபோதிலும், வளர்ச்சியின் அடிப்படையில் தமிழ்நாட்டோடு ஒப்பிடுகையில் மத்தியப் பிரதேசமும் ராஜஸ்தானும் இன்று எந்த நிலையில் நிற்கின்றன?
இப்போது, பல ஆண்டுகளாக போதுமான அளவு பணியாற்றாத பிறகு, முன்பை விட அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் கோருகிறீர்களா? இன்னும் அதிகமாகச் சீரழிக்கவா?! இன்னும் அதிகமாகச் சுரண்டவா?! இங்கே யார் யாரை ஏமாற்றிக்கொண்டிருப்பது?
இத்தனைக்கும் பிறகும், அந்தப் புள்ளிவிவரங்களை வெளியிடும் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறதா?" இவ்வாறு டான் அசோக் அந்த பதிவில் கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications