"சுங்க"த்தை கையில் எடுத்த கனிமொழி.. ஆட்சியாளர்கள் என்னைக்குதான் புரிஞ்சிப்பாங்களோ..டிவீட்டில் குட்டு
சுங்க கட்டண உயர்வு குறித்து திமுக எம்பி கனிமொழி அதிரடி ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "இந்த ஆட்சியாளர்கள் என்னைக்குதான் மக்களின் நிலைமையை புரிந்து கொள்வார்களோ?" என்று எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியதுடன், "இச்சூழலில் கூட, சுங்க கட்டணத்தை வசூலிக்காமல் இருக்க மனம் இல்லாதவர்கள், விலை ஏற்றத்தையாவது மனிதாபிமானத்தோடு தவிர்க்கலாம்" என்ற கருத்தையும் முன் வைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே கனிமொழி அதிரடிகளை காட்டி வருகிறார்.. குறிப்பாக, ஹிந்தி மொழி, மும்மொழி கொள்கை விவகாரங்களில் நேரடியாகவே மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார்.. ஆயுஷ் அமைச்சகத்துக்கு லெட்டர் எழுதி அந்த விவகாரத்தையும் அவர்களின் பார்வைக்கு கொண்டு போனார்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஏர்போர்ட் விவகாரம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.. இதற்கு காரணம், கனிமொழி என்றாலே எம்பிக்களில் அதிக ஃபேமஸ் ஆனவர் என்பதுடன், எந்த பிரச்சனையையும் தனித்துவமாகவே களமிறங்கி அவைகளுக்கு தீர்வு காணக்கூடியவர்!
உலகிலேயே அதிமுக அரசுக்கு தான் 'முதல் பரிசு' கிடைக்கும்... முதல்வரின் நடவடிக்கைகள் அப்படி -ஸ்டாலின்
சுங்க சாவடி
இப்போது சுங்க சுங்க கட்டணம் உயர்வு குறித்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.. தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருந்தது... அதனால், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட 21 சுங்கசாவடிகளில் நாளை முதல் ரூ.5 முதல் ரூ.10 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
இ-பாஸ் ரத்து
மேலும் சுங்கக் கட்டண உயர்வுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தொடர்ந்து கண்டணம் தெரிவித்து வருகின்றனர்... இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சிகள் அடுத்த குற்றச்சாட்டை ஆளும் தரப்பு மீது வைத்து வருகின்றனர்.
கனிமொழி
அந்த வகையில் கனிமொழியும் தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.. அதில், "பெருந்தொற்று காலம்.. வேலைவாய்ப்பு இழப்பு, பொருளாதார சிக்கல் என்று பல இன்னல்கள். இச்சூழலில் கூட சுங்கக் கட்டணத்தை வசூலிக்காமல் இருக்க மனமில்லாதவர்கள் விலை ஏற்றத்தையாவது மனிதாபிமானத்தோடு தவிர்க்கலாம். என்றுதான் மக்களுடைய சூழ்நிலையை புரிந்து கொள்வார்களோ ஆட்சியாளர்கள்?" என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்.
பாதிப்புகள்
கனிமொழியின் இந்த ட்வீட்டுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது.. "நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு எல்லாம் மக்களுக்கு நேரிடையாக பாதிப்பு ஏற்படுத்தும் பிரச்சினைகள்.... நீங்கள் எல்லாம் வெளிப்படையாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" என்று கனிமொழிக்கு ட்விட்டர்வாசிகள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
கமெண்ட்கள்
"நடந்து போகிறவர்களுக்கா வாங்குகிறார்கள்.. காரில் போகிறவர்கள் எல்லாரும் வசதியுடன் இருப்பவர்கள் தானே.. 5 ரூபாய் என்பது அவர்களுக்கு பெரிய விஷயம் இல்லையே.." என்று அதிமுக அரசின் இந்த சுங்க கட்டண உயர்வுக்கு சிலர் வரவேற்றும் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.
அதிரடி
மேலு சிலர், "கனிமொழி சுங்க கட்டணம் உயர்வு குறித்து கருத்து தெரிவித்து உள்ளார், ஆனால் கண்டனம் தெரிவிக்கவில்லை... இதற்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து மனு கொடுக்கலாம்.. மக்களின் எதிர்ப்பை தெரிவிக்கலாம்" என்று ஆலோசனையும் சொல்லி வருகிறார்கள். ஆக மொத்தம், கனிமொழி கையில் எடுத்துள்ள இந்த சுங்க கட்டணம் விவகாரம் குறித்து அரசு ஏதேனும் பரிசீலனை செய்யுமா? அதிலும் ஏதாவது தளர்வு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.