கிளம்பும் பூதம்.. லஞ்ச ஒழிப்புத்துறை FIR-ல் அரசியல் பிரமுகர்கள் பெயர்.. வெளிவந்த அதிர்ச்சி லிஸ்ட்!
சென்னை: சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியபோது, அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கைமாறியதாக எழுந்த புகார் தொடர்பாக, கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். முதல் தகவல் அறிக்கையில் சில முன்னாள் எம்.பி., எம்எல்ஏ, கவுன்சிலர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் பின்னி மில் பகுதியில் தனியார் நிறுவனங்கள் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. முன்னதாக, சுமார் 14.16 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தையொட்டி குறுகலான சாலை இருந்ததால், குடியிருப்பு கட்டடம் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) அனுமதி பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து, கவுன்சிலர் முதல் எம்எல்ஏ, எம்.பி என பல்வேறு அரசியல் பிரமுகர்களையும், அரசு அதிகாரிகளையும், சம்பந்தப்பட்ட தனியார் கட்டுமான நிறுவனங்கள் உதவி கேட்டுள்ளன.

இதற்கு கைமாறாக பல்வேறு மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு லஞ்சமாக மொத்தம் 50 கோடியே 86,125 ரூபாய் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2015-2017 அதிமுக ஆட்சி காலகட்டத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு இந்த லஞ்ச பணம் கைமாறியுள்ளது. இந்நிலையில், இந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபி அபய்குமார் சிங் தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கினர். புகாருக்கு உள்ளான கட்டுமான நிறுவனங்களான லேண்ட்மார்க் ஹவுஸிங் புராஜெக்ட்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் உதயகுமார், கேஎல்பி புராஜெக்ட்ஸ் நிறுவன இயக்குநர்கள் சுனில் கெத்பாலியா, மனீஷ் பார்மர் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஜனவரி 31ஆம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.
பில்டர்ஸ் நிறுவனங்கள் தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. இதில் லஞ்சம் பெற்றவர்கள் குறித்த முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிஎம்டிஏ அனுமதி பெறவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எம்.பி., எம்எல்ஏ, கவுன்சிலர், தாசில்தார், விஏஓஎன யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் தரப்பட்டது என்ற பட்டியல், முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
சிஎம்டிஏ செலவு என்ற பெயரில் ரூ.8,99,33,000 வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் கட்சி நிதி என்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு துறைகளுக்கும் கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாலகங்கா எம்.பிக்கு 23 லட்சம், திமுக ஜவஹருக்கு 33 லட்சம், எம்.எல்.ஏ நீலகண்டனுக்கு 40 லட்சம், மேயர் ரெஃபரன்ஸ் எம்.பி என்பவருக்கு 1 கோடியே 67 லட்சம், கவுன்சிலர் சரோஜாவுக்கு 2 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்காக, பில்டர்ஸ் நிறுவனத்தினர், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்ததாக பெயர்களுடன் பட்டியல் வெளியாகியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications