இதுதான் ஜெயலலிதாவின் சாதனை.. பழனிசாமியின் கையாலாகாத்தனம்! "மேகதாது - விடக்கூடாது" -முரசொலி தலையங்கம்
மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருக்கிறது என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளதற்கு முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை: கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருக்கிறது என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்து இருப்பதற்கு திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இதனை தமிழ்நாடு அரசு உறுதியாகத் தடுத்து நிறுத்தும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து இன்று முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, "மீண்டும் மீண்டும் கர்நாடக மாநில அரசு, மேகதாதுவைச் சொல்லி மிரட்டிக் கொண்டே இருக்கிறது.
'காவிரியின் குறுக்கே மேகதாது அணை யைக் கட்டியே தீருவோம்' என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். கட்டவிட்டு விடக் கூடாது என்பதுதான் நம்முடைய நிலைப்பாடு ஆகும்.

கர்நாடக முதலமைச்சர் உறுதி
கர்நாடக மாநில சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான இடைக் கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாகப் பேசிய கர்நாடக முதலமைச்சர் அவர்கள், "மேகதாது அணைத் திட்டம் பெங்களூருவுக்கு குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கான திட்டமாகும். அந்த அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருக்கிறது.

ஏன் எதிர்ப்பு?
அதற்குத் தேவையான நிதியை ஒதுக்கவும் தயாராக இருக்கிறோம்" என்று சொல்லி இருக்கிறார். இந்தத் திட்டமானது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும், தமிழ்நாட்டின் உரிமைக்கும் எதிரானது என்பதால் நாம் அதனை உறுதியாக எதிர்த்தும் வருகிறோம். கர்நாடக அரசின் இந்த முடிவு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது ஆகும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கும் எதிரானது ஆகும்.

கர்நாடகாவால் அணை கட்ட முடியாது
தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு அணையையும் கட்ட கர்நாடகாவால் முடியாது. ஒரு மாநிலத்தில் ஓடும் நதியை ஒரு மாநிலம் மட்டுமே சொந்தம் கொண்டாடவும் முடியாது. மேகதாது பற்றி விவாதிக்கவே காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு அனுமதி தர வில்லை. அப்படி இருக்கும் போது, அவர்களால் எப்படி அணையை கட்ட முடியும்?

மோடியிடம் கோரிக்கை
மேகதாது அணைக்கு அனுமதி தரக்கூடாது என்று பிரதமரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் சொல்லி வந்திருக்கிறார்கள். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள், ஒன்றிய அமைச்சரைச் சந்தித்தும் இதனைச் சொன்னார்கள். கடந்த மே மாதம் அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு இதனையே தீர்மானமாகவும் நிறைவேற்றி இருக்கிறோம்.

கண்டனம்
அந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிக்குழு டெல்லி சென்று வலியுறுத்தி வந்திருக்கிறது. "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ் படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப்பணியையும் மேற்கொள்ளக்கூடாது. அதை மீறி தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தினை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது கண்டனத்துக்குரியது.

தமிழ்நாடு விவசாயிகளுக்கு பாதிப்பு
இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் நீர் கிடைப் பது பாதிப்படையும். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான இத்தகைய முயற்சி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அர சின் அனைத்து அமைச்சகங்களும் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறோம்" - என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் எழுப்பி உள்ள குரல், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தமான குரல் ஆகும். இதில் நாம் உறுதியாக இருப்போம்.

கருணாநிதியின் முயற்சி
1989 ஆம் ஆண்டு வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது, முதல்வர் கலைஞர் முயற்சியால் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட் டது. இடைக்காலத் தீர்ப்பு கிடைத்தது. அதன் அடிப்படையில் தண்ணீர் வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க 1997 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமையக் காரணமாக இருந்தவரும் முதல்வர் கலைஞர்.

காவிரி மேலாண்மை வாரியம்
காவிரி இறுதித் தீர்ப்பும் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோதுதான் - 2007 ஆம் ஆண்டு வந்தது. 192 டி.எம்.சி.தான் தமிழ்நாட்டுக்கு என்றுதான் தீர்ப்பு வந்தது. அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு அனைவர் முடிவின்படி உச்சநீதிமன்றத்துக்கும் போனோம். காவிரி மன்றத்தையும் நாடினோம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் சொன்னோம்.

இதுதான் ஜெயலலிதாவின் சாதனை
கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சி என்பது காவிரி உரிமையை நிலைநாட்ட முயற்சிக்கவில்லை. இந்த இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட பின்னடைவை உச்சநீதிமன்றத்தில் சரி செய்ய முயற்சிக்காமல் இறுதித் தீர்ப்பை ஒன்றிய அரசின் அறிவிக்கையில் வெளியிடுவதை தனது சாதனையாகக் காட்டிக் கொண்டார் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா. அதில் இருந்து காவிரி பிரச்சினையில் பின்னடைவு ஏற்பட்டது.

அதிமுக அரசு முயற்சிக்கவில்லை
கழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விரைந்து விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் கொண்டு வரவும் முந்தைய அ.தி.மு.க. அரசு முயலவில்லை. 2017 ஆம் ஆண்டு ஜூலை 10, செப்டம்பர் 20 ஆகிய இரண்டு நாட்களும் விசாரணை நடந்தது. இங்குதான் பழனிசாமி அரசின் கையாலாகாத்தனம் வெளிப்பட்டது. சரியான வாதங்களை வைத்து பழனிசாமி அரசு வாதாடவில்லை.

2 கருத்துக்கள்
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் இரண்டு முக்கியமான கருத்துருக்கள் உள்ளன.
1. நிலத்தடி நீர் பயன்பாடு காவிரி நதியின் நீர் உபயோகமாகக் கருதக்கூடாது.
2. குடிநீர், தொழிற்சாலை, உள்ளாட்சி ஆகியவற்றுக்காக தண்ணீரை பயன்படுத்தினால் அந்தத் தண்ணீர் அந்தந்த மாநில கணக்கீடடில்தான் சேர்க்கப்படும். - என்று இறுதித் தீர்ப்பில் உள்ளது. அதை வைத்து பழனிசாமி அரசு வாதங்களை வைக்கவில்லை.

பழனிசாமி அரசு
தனக்கு நிலத்தடி நீர் குறைந்துவிட்டதாக கர்நாடக அரசு வாதங்களை வைத்ததை பழனிசாமி அரசு மறுக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு நிலத்தடி நீர் வளம் உள்ளதாகச் சொல்லி 10 டி.எம்.சி. குறைக்கப்பட்டதை பழனிசாமி அரசு கேள்வி எழுப்பவில்லை. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் கருத்துருவைச் சொல்லி வாதிடவில்லை பழனிசாமியின் அரசு.

அதிமுக அரசின் முரண்பாடு
அ.தி.மு.க. அரசு தாக்கல் செய்த மனுவுக்கும் அவர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் வாதத்துக்கும் முரண்பாடுகள் இருந்தன. எது சரியானது என்று நீதிப திகளே கேட்டு, மனுவில் சொன்னதே சரியானது என்று அவர்களாக முடிவுக்கு வந்தார்கள். அதன்பிறகு காவிரி உரிமை என்பதே ஒன்றிய அரசின் ஜல்சக்தி துறையின் கிளைப்பிரிவு போல ஆகிவிட்டது. இதன் பிறகே தன்னைக் கேட்க யாருமில்லை என்ற முடிவுக்கு கர்நாடகம் வந்துவிட்டது.

வேடிக்கை பார்க்காது
இப்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உரிமையைப் போராடி வாதாடிப் பெறும் மு.க.ஸ்டாலின் அவர்களது அரசு இதனை வேடிக்கை பார்க்காது. மேகதாது அணையைக் கர்நாடகம் கட்டுவது என்பது, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகம் என் பதால் அதனை உறுதியாகத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications