பாமக தேர்தல் அறிக்கையில் மாம்பழம், இரட்டை இலை, தாமரை ஆல் பிரசன்ட்.. முரசு ஆப்சன்ட்.. என்ன காரணம்?
சென்னை: பாமக தேர்தல் அறிக்கை புத்தகத்தின் முகப்பில் தேமுதிகவின் சின்னமான முரசு சின்னம் இடம்பெறவில்லை. இது அக்கட்சியினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது. இந்த கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பாமக தேர்தல் அறிக்கை இன்று வெளியிட்டுள்ளது. அதன் முகப்பு பக்கத்தில் தமிழகத்தின் வரைப்படம் இடம்பெற்றிருந்தது. அதன் பின் பக்கத்தில் அன்புமணி ராமதாஸின் படமும், ராமதாஸின் படமும் இடம்பெற்றிருந்தன.

ராமதாஸ் வாசகம்
அதில் தமிழ்நாட்டின் வளர்ச்சி இலக்குகள் விரைந்து எட்டப்பட வேண்டும். தமிழகம் இழந்த உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும். கல்வி தழைத்தோங்க வேண்டும். உழவும், தொழிலும் சிறக்க வேண்டும். இவை அழைத்து மெய்ப்படுவதற்கு பாமக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெல்ல வேண்டும் என ராமதாஸ் கூறிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

மாம்பழம்
2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய சின்னங்கள் மாம்பழம், இரட்டை இலை, தாமரை ஆகியவை என அச்சிடப்பட்டுள்ளன. இதில் தேமுதிகவின் சின்னமான முரசு சின்னம் இடம்பெறவில்லை. அதிமுக கூட்டணியில் தேமுதிக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

உடன்பாடு
இந்த பேச்சுவார்த்தையில் இன்னும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. மேலும் 21 தொகுதிகளையும் தேமுதிக கேட்டு வருகிறது. ஆனால் அதிமுகவோ வெறும் 14 தொகுதிகளை மட்டுமே கொடுப்பதாக பிடிவாதம் காட்டுகிறது. இதனால் தேமுதிகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என தெரியவில்லை.

தொகுதி உடன்பாடு
தேமுதிக- அதிமுக இடையேயான தொகுதி உடன்பாடு இன்னமும் சுமூக முடிவு எட்டப்படாததால் பாமக தேர்தல் அறிக்கையில் முரசு சின்னம் இடம் பெறாமல் இருந்திருக்கலாம் என தெரிகிறது. இது தேமுதிகவினரை கவலையடையச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications