ராஜீவ் கொலை வழக்கு: இங்கிலாந்து செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்க ஐடி கார்டு கேட்டு முருகன் வழக்கு
சென்னை: இங்கிலாந்து செல்வதற்கான விசாவிற்கு விண்ணப்பிப்பதற்காக ஆதார் அட்டை பெறும் வகையில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தண்டனையிலிருந்து விடுதலையான முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 7 பேரையும், 31 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்து 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஏழுவரில் ஒருவரான முருகன் இலங்கை குடிமகன் என்பதால் அவரை திருச்சியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். முருகன் மற்றும் நளினியின் மகள் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் வசிப்பதால், அவருடன் சேர்ந்து வாழ்வதற்கான நடவடிக்கைகளை இருவரும் எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக லண்டன் செல்வதற்கான விசா பெறுவதற்கு ஆதார் அட்டை தேவைப்படுவதால் அதற்கு விண்ணப்பிக்க ஏதுவாக புகைப்பட அடையாள அட்டையை வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் மனு தாக்கல் செய்துள்ளார்.
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கடந்த மாதம் (செப்டம்பர்) அளித்த மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை எனவும், தனக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்காமல் இருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு விசாரணையில் இருந்து தான் விலகி கொள்வதாக நீதிபதி சுந்தர் மோகன் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications