“மூச்சு விடுவது போல.. எனக்கு இசை இயற்கையாக வருகிறது.." சென்னை ஐஐடியில் இளையராஜா பேச்சு
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் இசை ஆராய்ச்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா மூச்சு விடுவதைப் போல தனக்கு இசை வருவதாகத் தெரிவித்தார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் இளையராஜா Music learning and research செண்டர் தொடங்க ஐஐடி மெட்ராஸ் மற்றும் இளையராஜா தரப்பிற்கு இடையே புரிந்துணர்வு போடப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற இசை புதிய ஆராய்ச்சி மையத்திற்கான அடிக்கல் நடும் விழாவில் கலந்து கொண்ட இளையராஜா, மூச்சு விடுவது போல தனக்கு இசை இயற்கையாக வருவதாகத் தெரிவித்தார்.
இசை ஆய்வு மையம்: முன்னதாக இந்த நிகழ்வின் அறிமுக கூட்டத்தின் போது பேசிய ஐஐடி இயக்குநர் காமகோட்டி, "இந்தியக் கலாச்சார இசையை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் நாட்டில் உள்ள கடைக்கோடி மனிதனுக்கும் எடுத்துச் சென்றவர் இசைஞானி இளையராஜா.. சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையம் சார்பில் இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது" என்றார்.
இளையராஜா: இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இசைஞானி இளையராஜா பேசுகையில், "இது எனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள்.. இசையைக் கற்றுக்கொள்ள வந்த எனக்கு அப்போது அம்மா 400 ரூபாய் கொடுத்து அனுப்பினார்.. அன்று கிராமத்தில் இருந்து இசையை கற்றுக் கொள்ள எப்படி இருந்தேனோ.. இப்போதும் அதேபோலத் தான் இருக்கிறேன்.
மூச்சுவிடுவது போல: நான் சென்னைக்கு வந்த நாளில் இருந்து இதுநாள் வரை நான் இசையை கற்றுக் கொள்ளவில்லை. இங்கே நான் ஏதோ பெரிதாகச் சாதித்துவிட்டது போலச் சொல்கிறார்கள். ஆனால், எனக்கு அப்படித் தோன்றவில்லை. மூச்சு விடுவது எப்படி இயற்கையாக நடக்கிறதோ அதேபோலத் தான் எனக்கு இசையும் இயற்கையாக வருகிறது. என்னைப் பார்த்து யாராவது நன்றாக இசையமைக்கிறீர்கள் எனச் சொன்னால்.. நன்றாகச் சுவாசிக்கிறீர்கள் எனச் சொல்வது போலத் தான் இருக்கிறது.
கிராமத்தில் இருந்து இசை கற்றுக் கொள்ள வந்த நான், இன்று என்னுடைய பெயரில் செண்டர் ஆரம்பித்து இசை கற்றுக் கொடுக்கப் போகிறேன் .. இது நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.. இந்த மையத்தில் இருந்து குறைந்தது 200 இளையராஜா உருவாக வேண்டும்..
பாரதி சொன்னது தவறு: எட்டுத்திக்கும் சென்று கலை கற்றுவந்து இங்குச் செயல்படுத்துங்கள் என்று அன்று பாரதியார் சொன்னார்.. ஆனால் அது தவறு இங்கு இருந்து தான் எட்டுத்திக்கும் சென்று கலையைப் பரப்ப வேண்டும்" என்று அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications