"மீனு" விரட்டுதே.. "மட்டன்" மிரட்டுதே.. கோழிக்கறிகூட "செக்" வைக்குதே.. இவ்ளோ விலையா? பரபர காசிமேடு
சென்னை: மீனவர்களால் இன்னும் கடலுக்கு செல்ல முடியவில்லை.. இதனால், சிக்கன் விலையும் உயர்ந்துவிட்டது, பொதுமக்களை கவலைக்குரியதாக்கி வருகிறது.
தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலமாக மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
இதையடுத்து, வருடந்தோறும், மீன்வளத்தை பெருக்கும் வகையில், இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

மீன்பிடித்தடைக்காலம்: அந்தவகையில், இந்த வருடமும் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் விதிக்கப்பட்டது.. அதாவது, கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல். ஜுன் 14-ந் தேதிவரை அமலில் இருந்தது... இந்த தடைகாலத்தில், விசைப்படகுகள் உள்ளிட்ட பெரிய படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது.. பைபர் மற்றும் நாட்டுப்படகில் குறிப்பிட்ட நாட்டிக்கல் மைல் தூரம் வரை சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் மட்டுமே கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் 2 மாத காலமாக சென்னையில் மீன்வரத்து மிகவும் குறைந்து இருந்ததால் குறைவான விலை மீன்கள் கூட அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த தடையானது நேற்று நள்ளிரவு 12 மணியோடு முடிவுக்கு வந்தது.. இதனால் காசிமேட்டில் நேற்று அதிகாலையிலிருந்து விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்ல தயாராகிவிட்டனர்.. கடலுக்கு செல்வதற்கு முன்னால், மீனவர்கள் படகுகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
காசிமேடு பிஸி: பிறகு, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 800 விசைப்படகுகள் மற்றும் 1100 பைபர் படகுகள் மூலம் நேற்று மாலை கடலுக்குள் மீனவர்கள் சென்றிருக்கிறார்.. இதில் சிலர் வருகிற ஞாயிற்றுக்கிழமை கரை திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதற்கு பிறகுதான், மீன் விலை கணிசமாக குறையும் என்று மீன் பிரியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.. இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் வழக்கத்தை விட பரபரப்பாக காணப்பட்டு வருகிறது என்றாலும், இதிலும் ஒரு சிக்கல் வந்துள்ளது.

மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்ற அறிவிப்பு வந்ததால், அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.. இதனால் அடுத்தடுத்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாத நிலைமை உள்ளது.. இப்போதுதான் மீன்பிடி தடைக்காலம் முடிந்து, கடலுக்குள் செல்லலாம் என்று தயாராகி வரும்சூழலில், இந்த அறிவிப்பு வந்துள்ளது..
திடீர் உயர்வு: இதையடுத்து, சிக்கன் விலை உயர்ந்துவிட்டதாம்.. கிலோ ரூபாய் 300 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.. ஏற்கனவே மட்டன் விலையை கேட்டு, சாப்பிட முடியாமல் பலர் உள்ளதால்தான், மீன் பக்கம் நகர்ந்தனர்.. இப்போதும் மீன்வரத்தும் இல்லாத நிலையில், சிக்கன் விலையும் உயர்ந்துள்ளது அசைவ பிரியர்களுக்கு கவலையை தந்துவருகிறது.












Click it and Unblock the Notifications