தேவநாதன் யாதவ் சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை.. வாதத்தை கேட்டு மீண்டும் ஜாமீன் மறுத்தது ஐகோர்ட்!
சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. தேவநாதன் சொத்துகள் அடையாளம் காணப்பட்டு பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜாமீன் மறுத்தது உயர்நீதிமன்றம்.
சென்னை தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அந்த நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தேவநாதன் உள்பட 6 பேரை சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் 100 கோடி ரூபாயை விசாரணை நீதிமன்றத்தில் வைப்புத்தொகையாகச் செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது. ஆனால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டது.
இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், தேவநாதன் யாதவை கைது செய்ய உத்தரவிட்டிருந்தது. தேவநாதனை கைது செய்து ஆஜர்படுத்தும் வகையில் அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதையடுத்து தேவநாதன் யாதவ் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு தேவநாதன் யாதவ் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்கத் தயாராக இருப்பதாகவும், இதற்காக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை ஆணையராக நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ராஜசேகர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில், சொத்துகள் அடையாளம் காணப்பட்டு பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், எனவே அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
முதலீட்டாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி, ஏற்கனவே மூன்று முறை ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கும், தற்போதும் எந்த சூழலும் மாறவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்த கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை எதையும் அவர் நிறைவேற்றவில்லை என்றும் குறிப்பிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜசேகர், தேவநாதன் யாதவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications