சீமான் vs விஜயலட்சுமி: மாதர் சங்கத்தை ஆபாசமாக பேசிய நாம் தமிழர் தம்பி- 'துடைப்ப' போராட்டத்தால் கைது!
சென்னை: நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிபிஎம்-ன் அனைத்திய ஜனநாயக மாதர் சங்கம் மனு கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
திருமண மோசடி, கட்டாய கருக்கலைப்பு விவகாரத்தில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் நடிகை விஜயலட்சுமி. இது தொடர்பாக போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பி இருக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜனநாயக மாதர் சங்கம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு தந்தது. இதனை விமர்சித்து சமூக வலைதளங்களில் இழிவாக நாம் தமிழர் நிர்வாகி தமிழ் செந்தில் என்பவர் பதிவிட இந்தப் பிரச்சனை வெடித்திருக்கிறது.
இது தொடர்பாக சிபிஎம்- தமிழ் மாநிலக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றியதாகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் திரைக்கலைஞர் விஜயலட்சுமி சென்னை காவல்துறை ஆணையாளர் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார்.

மாதர் சங்கம் புகார்: சீமான் போன்று ஒரு அரசியல் கட்சித் தலைவரே தமிழகத்தில் இப்படி பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவது என்பது தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்ற அடிப்படையில், விஜயலட்சுமி அவர்கள் கொடுத்துள்ள புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி செப். 9ம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
மாதர் சங்கம் குறித்து அவதூறு: அதன் பிறகு சீமான் ஆதரவாளர்கள் சிலர் அனைத்திந்திய ஜனநாயக மாதம் சங்கம் குறித்தும், அதில் பணியாற்றும் தலைவர்கள் குறித்தும் மிக மோசமான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக மயிலாடுதுறையைச் சார்ந்த தமிழ் செந்தில் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் மிக மோசமாக மாதர் சங்கத்தை பற்றியும், தந்தை பெரியார் பற்றியும் பதிவிட்டுள்ளார்.

நாம் தமிழர் தமிழ் செந்தில் கைது: இதைக் கண்டித்து மயிலாடுதுறை மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வெண்ணிலா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். மோசமாக பதிவிட்ட தமிழ் செந்தில் வீட்டு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியுள்ளனர். பின்னர் மயிலாடுதுறை காவல்துறை தமிழ் செந்தில் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இவர் நாம் தமிழர் கட்சி செயல்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிஎபிம் தமிழ் மாநிலக் குழு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications