சொல் அல்ல செயல்.. சீமான் 'அண்மைய' பிரஸ்மீட் படங்களில் 'அந்த' அதிமுக்கிய மாற்றங்களை கவனித்தீர்களா?
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாள்தோறும் செய்தியாளர்களை சந்திப்பதும் இரவில் தொடர்ந்து பொதுக் கூட்டங்களில் உரையாற்றுவதுமாக பிஸியாகவே இருக்கிறார்.
தமிழ்நாட்டில் சொல் ஒன்று செயல் வேறு என்று செயல்படாமல் கொள்கை வழி நடக்கிறேன் என சொல்பவர் சீமான். ஒவ்வொரு பிரச்சனைக்கும் அவர் முன்வைக்கும் தீர்வுகள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தக் கூடியவை.

காவிரி பிரச்சனை:காவிரி நதிநீர் பிரச்சனைக்காக தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்; சென்னையில் சீமான் போராட்டம் நடத்தினார். ஆனால், வீராணம் ஏரியை வைத்தே காவிரி டெல்டாவுக்கு தண்ணீர் பஞ்சத்தை போக்க முடியும் என்கிற ஒரு திட்டத்தை முன்வைத்தார். இதனால் காவிரிக்காக கர்நாடகாவிடம் கையேந்த தேவை இல்லை என்றார் சீமான். இது பல்வேறு விமர்சனங்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது.

மீனவர் பிரச்சனை: தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனை குறித்து பேசும் போது, நாம் தமிழர் ஆட்சியில் நெய்தல் படை அமைக்கப்படும்; படகுகளில் கையெறி வெடிகுண்டுகளை கொடுத்து அனுப்புவேன் என சீமான் பேசியதும் பேசுபொருளானது.

பெண்களுக்கு சம உரிமை: பெண்களுக்கு சம உரிமை கொடுப்பதில் தமது கட்சி எப்போதும் முன்னணியில் இருக்கிறது என்று பேசும் சீமான், வேட்பாளர்கள் பட்டியலில் எப்போதும் 50% இடஒதுக்கீடு வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். தமிழ்நாட்டிலேயே இந்தியாவிலேயே இதனை செய்யக் கூடிய ஒரே கட்சி தம்முடைய நாம் தமிழர் கட்சி என்பது சீமானின் பெருமிதம்.
சீனியர் நிர்வாகிகளுடன் சீமான்: பொதுவாக சீமானின் பெரும்பாலான பேட்டிகளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் உடனிருப்பர். இவர்களில் பலரும் இப்போது சீமானுடன் இல்லை. அய்யநாதன் தொடங்கி மதுரை வெற்றிக்குமரன் வரை பலரும் விலகிவிட்டனர். இந்த பட்டியலில் இப்போதும் பின் நிற்பவர் சென்னை அன்பு தென்னரசன் மட்டும்தான்.

பெண் நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம்: இதனிடையே கடந்த சில மாதங்களாக சீமான் செய்தியாளர் சந்திப்புகளில் ஒரு பெரும் மாற்றத்தை எல்லோராலும் பார்க்க முடியும். சீமான் செய்தியாளர் சந்திப்புகளில் எப்போதும் இரு பக்கமும் கட்சி நிர்வாகிகள்தான் அமருவர். ஆனால் கடந்த சில மாதங்களாக தவறாமல் பெண் நிர்வாகிகள் உடனிருக்கின்றனர்; பின்னாலும் பெண் நிர்வாகிகள் உட்கார வைக்கப்படுகின்றனர். பெரும்பாலும் பெண் நிர்வாகிகள் சகிதமாகவே சீமான் பேட்டி கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். சில செய்தியாளர் சந்திப்புக்கு முன்னர் பெண் நிர்வாகிகளை தேடிப் பிடித்தும் உட்கார வைப்பதும் காணக் கூடியதாக இருந்தது. பெண்களுக்கு முன்னுரிமை என்பதை சொல் அல்ல செயலில் நிரூபிக்கிறார் எங்கள் அண்ணன் என்கின்றனர் சீமானின் தம்பிகள்.












Click it and Unblock the Notifications