"தேவையில்லை" 10% இடஒதுக்கீடு.. உயர்சாதி ஏழைகளுக்கு எதற்கு? கொதிக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமான்!
சென்னை: உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு பின் தேர்தல் அரசியல் அனைவரையும் நாம் தமிழர் கட்சி திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து போட்டியிடுவது, வாக்கு வங்கி சதவிகிதத்தில் தொடர்ந்து வளர்ச்சி என்று சீமான் பலரையும் ஈர்த்துள்ளார்.
அதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு விவகாரங்களில் திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் சீமான், பாஜகவை இன்னும் தீவிரமாக எதிர்த்து வருகிறார். அதேபோல் சில நேரங்களில் ஆ.ராசா விவகாரம், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
10% இடஒதுக்கீடு விவகாரம்.. ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர் ஏழையா? இறங்கி அடிக்கும் பிடிஆர்!
எதிர்க்கட்சிகள்
இதனிடையே உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு, ஆளுநர் vs திமுக மோதல், கனமழை பாதிப்பு என்று எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால் நாம் தமிழர் கட்சியின் சீமான் கடந்த சில வாரங்களாக அமைதி காத்து வருகிறார். அறிக்கைகளிலும், ட்விட்டர் வாயிலாகவும் அரசியல் பேசி வந்த சீமான், தற்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
10% இடஒதுக்கீடு
இந்த நிலையில் உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்தில் சீமான் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறுகையில், இடஒதுக்கீடு என்பது ஏழை, பணக்காரன் என்று பொருளாதார ரீதியான ஏற்றத் தாழ்வுகளுக்காக கொண்டு வரப்பட்டது அல்ல.
நாதக நிலைப்பாடு
சாதியால் சமூகத்தில் இருந்து அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை மறுக்கப்பட்டது. அதனால் அதே சாதியின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பில் நீதி வழங்குவதே இடஒதுக்கீட்டின் அடிப்படை. ஆனால் உயர்சாதிகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்குகிறார்கள். அவர்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என்பதே நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.
அண்ணன் - தம்பி சண்டை
தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சிப்பது ஏன் என்ற கேள்விக்கு, திமுகவினருடன் தனிப்பட்ட முறையில் எந்த பகையும் கிடையாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணன் போலவே நினைக்கிறேன். அவரை விமர்சிப்பது கூட அண்ணன், தம்பி சண்டை போலதான். அதேபோல் திமுகவின் முக்கிய தலைவர்கள் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.