தினம் தினமும் நீதிமன்றம்...இன்று விக்கிரவாண்டி.. நாளை திருச்சி.... விடாது கோர்ட் 'படிகளேறும் சீமான்'
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தி பேசியது தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இன்று விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரானார். முன்னதாக, விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்ற படிகள் ஏறினால்தான் நிதானமாக பேசுவார் என காட்டமாக கூறியிருந்தது.
ராஜீவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தி பேசியது, தந்தை பெரியாரை இழிவுபடுத்தி அவதூறாக விமர்சித்தது, நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பலாத்காரம் செய்தது, திருச்சி டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக விமர்சித்தது உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் சீமான் மீது நிலுவையில் உள்ளன.

நடிகை விஜயலட்சுமி தம் மீது கொடுத்த பலாத்கார புகாரை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடியானது. அப்போது, சீமானின் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், பலாத்கார வழக்கை எளிதாக விட்டுவிட முடியாது என காட்டமாக கூறியிருந்தது.
அதற்கு முன்னர், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தி பேசியது தொடர்பான வழக்கில நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவையும் டிஸ்மிஸ் செய்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்ற படிகள் ஏறினால்தான் நிதானமாக பேசுவார் என எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் இன்று சீமான் ஆஜரானார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி தொடர்பான வழக்கை தொடர்ந்து நடத்துவோம் என்றார்.
இதனிடையே திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில், சீமான் நாளை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகிறார். இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் ஆஜராகாமல் சீமான் நாளை கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் கறாராக உத்தரவிட்டிருந்தது.












Click it and Unblock the Notifications