முதல்வரும் நானும்.. ஸ்டாலின் குறித்து நயினார் நாகேந்திரன் சொன்ன வார்த்தை.. சட்டசபையே கலகல!
சென்னை: தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான நடந்த விவாதத்தில் பேசிய நெல்லை தொகுதி எம்எல்ஏவும் பாஜக மாநில துணை தலைவருமான நயினார் நாகேந்திரன், "பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் போல நானும் முதல்வரும்" "எனக்கு கூடுதல் நேரம் வேண்டும்" என்று கூறி கலகலக்க வைத்தார். அதன்பின்னர் தொடர்ந்து பேசினார்.
Recommended Video
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று முதல் நடந்து வருகிறது. இன்றைய விவாதத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், அடுத்தடுத்து சில கேள்விகளை எழுப்பினார்.
அந்த கேள்விகள் எல்லாம் மிக முக்கியமானது என்பதால் அதற்கு முதல்வர் ஸ்டாலினே பதில் அளித்தார். ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

ஒன்றிய அரசு
அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், ஒன்றிய அரசு என கூறுவது சமூக குற்றமல்ல; சட்டத்தில் என்ன சொல்லி இருக்கிறதோ அதை தான் சொல்லி இருக்கிறோம். மாநிலங்கள் ஒன்று சேர்வது தான் ஒன்றியம். இது தவறானது அல்ல என்றார்.

ஸ்டாலின் கேள்வி
அதேநேரம் ஸ்டாலினும் நயினார் நாகேந்திரனிடம் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பினார். அதாவது நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்பதே திமுக, அதிமுக நிலைபாடு. சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டோம், அமைச்சரவையில் முடிவெடுத்தோம். நீட் தேர்விலிருந்து விலக்கு பெற பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் குரல் கொடுக்க தயாரா? என்று -சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

பாஜக அறிவிப்பு
இதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாடு அரசு நீட் தேர்வுக்கு விலக்கு கோரினால் நாங்கள் ஆதரவு தருகிறோம் எனக் கூறினார். இதன் மூலம் பாஜக நீட் தேர்வுக்கு ஆதரவு அளிக்க தயார் என்பதை தெளிவு படுத்தி உள்ளது.

கோப்பெருஞ்சோழன்
இந்த சூழலில் சட்டசபையில் கொடுக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்துள்ளார் நயினார் நாகேந்திரன். அதனால், சபாநாயகர் அவரிடம் 'உரையை நிறைவு செய்யுங்கள்' என்று கூறினார். அப்போது, முதல்வருடனான நட்பு பற்றி பேசிய நயினார் நாகேந்திரன், "பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் போல நானும் முதல்வரும்" என்று கூறி, "எனக்கு கூடுதல் நேரம் வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து அவர் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசி உரையை நிறைவு செய்தார்.

அரசு தலையிட வேண்டாம்
குறிப்பாக நயினார் பேசிய இன்னொரு முக்கியமான விஷயம், கோயில் அர்ச்சகர்கள், இதுபற்றி கூறும் போது, தமிழகத்தில் உள்ள 44,000 கோவில்களில்,40,000 கோவில்களில் அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர்களாக உள்ளதாகவும், 4,000 கோவில்களில் மட்டுமே ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார். அந்த 4000 கோயில்களில் தமிழக அரசு தலையிட கூடாது என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications