அதிமுக ஒன்னு சேரனும்..டிடிவி ஏன் அப்படி பேசுகிறாருனு எனக்கு விளங்கல மக்கா! நயினார் நாகேந்திரன் பதில்
நெல்லை: அதிமுக ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும் எனவும், சந்திர கிரகணம் போல் ஆட்சி மாற்றம் நிகழும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி பாளையங்கோட்டை அன்பு நகரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் நிறைய கிரகணங்கள் நடைபெற்று வருகின்றன. ஆட்சி மாற்றம் வேண்டும், கிரகணம் விரைவில் நடைபெறும்.
அகில இந்தியத் தலைமை என்ன கூறுகிறதோ, அதைத்தான் நான் கேட்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதிமுக கட்சியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இது தொடர்பாகப் பல தலைவர்களிடம் நான் பேசியுள்ளேன்.

நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் திமுக ஆட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது. திமுகவுக்கு மாற்றான அரசு அமைய வேண்டும். இதற்காக அதிமுக கட்சி அனைவரும் ஒன்றிணைய வேண்டும். டெல்லி தலைமையோடு பேசி அனைவரையும் ஒன்றிணைக்க ஒரு முடிவு எடுக்கப்படும். தோல்வியே பிறருக்குக் கொடுத்து வளர்ந்தவர்கள் நாங்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போல. அதுபோல வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்குத் தோல்வியைத் தருவோம். 2001-ல் நடந்த தேர்தலில் என் போன்றவர்கள் மேலே வந்ததில் டிடிவி தினகரனுக்கு முக்கிய பங்கு உண்டு.
டிடிவி தினகரன்
2019 நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணா திமுக - பாஜக ஒரு கூட்டணியாக இருந்தது. இப்பொழுது டிடிவி தினகரன் கூட்டணியில் இல்லை. பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு தனிக்கட்சி ஆரம்பித்தார். 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அண்ணா திமுகவோடு பாரதிய ஜனதா கட்சி கூட்டணியோடு இருந்து 65 இடங்களில் போட்டியிட்டு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றோம். பாட்டாளி மக்கள் கட்சியும் சில சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றன. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது. தொடர்ந்து எங்களோடு இருப்பார்கள் என்று பலமுறை கூறியிருக்கிறேன்.
என்.டி.ஏ கூட்டணி
பலமுறை டிடிவி தினகரனோடு தொலைபேசியில் பேசியிருக்கிறேன். அப்பொழுது எல்லாம் கூட்டணி தொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் திடீரென்று நயினார் தான் காரணம் என்று கூறுகிறார். நயினார் நாகேந்திரன் செயல்பாடுகளால் தான் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி உள்ளோம், நயினார் நாகேந்திரன் அகங்காரத்தில் செயல்படுகிறார் என்று எதன் அடிப்படையில் கூறுகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்கு விளங்கவில்லை. திருநெல்வேலி பாஷையில் கூற வேண்டும் என்றால், எனக்கு விளங்கல.
முக ஸ்டாலின்
இந்திய நாட்டிற்கும் லண்டனுக்கும் நமது முதலமைச்சர் நேரடியாகச் சென்று நட்புறவை ஏற்படுத்தினாரா? முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக, முதலீடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதுவரை அதற்கான பதில் இல்லை. கொளத்தூர் தொகுதியில் 9000 ஓட்டுகள் திருட்டு நடைபெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அது தொடர்பாகத் தாங்கள் ஆய்வு செய்ய உள்ளோம்.
செங்கோட்டையன்
அதிமுகவில் நீக்கப்பட்ட செங்கோட்டையன், பாஜகவிற்கு வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "ஒரு கட்சியுடன் கூட்டணியில் இருக்கும்போது செங்கோட்டையனை அழைப்பது நாகரிகமாக இருக்காது" என்று அவர் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications