தவெகவில் இணைந்த செங்கோட்டையன்! எங்கள் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது! - நயினார் நாகேந்திரன்
சென்னை: அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார். அவரது இணைவு அதிமுக-பாஜக கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற தலைவர்களை இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் கட்சி வந்த பின்னர் எந்த தேர்தல்களிலும் வெற்றி பெறவில்லை. எனவே கட்சியன் தலைமையை வலுப்படுத்த வேண்டும், அனைத்து வாய்ப்புகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தார்.

இப்படி இருக்கையில்தான், சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். இதற்காக 10 நாட்கள் அவகாசம் தருகிறேன் என்று பேசியிருந்தார். ஆனால், 10 நாட்கள் கழித்து எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதற்கிடையில் டெல்லி சென்று பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்திருந்தார். மறுபுறம் செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
இப்படி இருக்கையில், தவெகவில் செங்கோட்டையன் இணைவார் என்று பேச்சுகள் அடிபட்டன. இதனை உறுதி செய்யும் விதமாக நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இன்று காலை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு செங்கோட்டையன் சென்று தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "இந்த இணைவு பாஜக-அதிமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications