"விஜய் தோற்றால்.. பிள்ளைகள் விபரீத முடிவை எடுக்கும் அபாயம்.." பெற்றோருக்கு நக்கீரன் கோபால் கோரிக்கை
சென்னை: தமிழக அரசியல் களம் இப்போது மே 4ம் தேதியை நோக்கித் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. அன்றைய தினம் தான் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதன் தலைவர் விஜய் குறித்து நக்கீரன் கோபால் தெரிவித்துள்ள கருத்துகள் சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த வாரம் எந்தவொரு பெரிய சிக்கலும் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இந்த முறை தமிழகத்தில் திமுக, அதிமுக கூட்டணி களத்தில் இருக்கிறது. அத்தோடு நாம் தமிழர் கட்சி வழக்கம் போலத் தனித்துப் போட்டியிடுகிறது. மேலும், விஜய்யின் தமிழக வெற்றி கழகமும் இந்த முறை தேர்தல் அரசியலுக்கு வந்துள்ளது.

தவெக
வாக்குப்பதிவு முடிந்து முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இருப்பினும், வெல்லப் போவது ஒரு கட்சி தான்.. மற்றவர்களுக்கு ஏமாற்றமும் தோல்வியும் தான் கிடைக்கும். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பல வெற்றி, தோல்வியைப் பார்த்தவர்கள். ஆனால், தவெக அப்படி இல்லை. முதல்முறையாகத் தேர்தலைச் சந்திக்கப் போகிறார்கள்.
நக்கீரன் கோபால்
இந்தச் சூழலில், "முடிவுகள் சாதகமாக வராவிட்டால் என்னவாகும்?" என்ற நக்கீரன் கோபால் முன்வைக்கும் கருத்துகள் இப்போது விவாதமாக மாறியுள்ளது. இது தொடர்பாக நக்கீரன் கோபால் இரு கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதில் தீவிர ரசிகர்கள் மற்றும் தம்பிகள் குறித்து மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர், "விஜய் அண்ணா தான் சி.எம் என்ற கனவில் இருக்கும் இளைஞர்கள், ஒருவேளை தேர்தல் முடிவுகள் எதிராக அமைந்தால், அதைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தில் இருக்கிறார்களா என்பது கேள்விக்குறி.
கோரிக்கை
விஜய் மண்ணைக் கவ்வினால்.. அந்தப் பிள்ளைகள் தவறான முடிவுகளுக்குச் சென்றுவிடக் கூடாது. முன்னதாக 'புளூ வேல்' போன்ற விளையாட்டுகளால் குழந்தைகள் பாதிக்கப்பட்டதைப் போல, இந்த ஏமாற்றம் அவர்களைப் பாதித்துவிடக்கூடாது. எனவே, மே 4-ம் தேதி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மிகக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்" என அவர் சமூக எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே, பனையூர் அலுவலகத்தில் விஜய்யின் அமைச்சரவை குறித்த ஆலோசனைகள் நடப்பதாகவும், அவர்கள் இப்போதே நாற்காலிகளைப் போட்டு அமர்ந்துவிட்டதாகவும் பில்டப் வருவதாக நக்கீரன் கோபால் விமர்சித்துள்ளார். "ஆளுங்கட்சியோ, மற்ற எதிர்க்கட்சிகளோ செய்யாத ஒரு விஷயத்தை தவெக இப்போதே செய்கிறது. ஒருவேளை மே 4ம் தேதி இந்தக் கனவுகள் கலைந்துபோனால் என்ன செய்வார்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக மீது பழி?
அதேபோல அவர் இன்னொரு கருத்தையும் முன்வைக்கிறார். அதாவது, ஒருவேளை தோல்வி ஏற்பட்டால், அதற்குத் தகுந்த காரணத்தையும் தவெக இப்போதே தயாராக வைத்திருப்பதாகக் கூறுகிறார். அவர் இது தொடர்பாக, "நாங்கள் சரியாகத் தான் இருந்தோம், ஆனால் கடைசி நேரத்தில் திமுக எல்லாவற்றையும் மாற்றிவிட்டது என திமுக மீது பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளும் மனநிலையில் அவர்கள் உள்ளனர்" நக்கீரன் கோபால் சாடியுள்ளார்.
அரசியலில் வெற்றியும் தோல்வியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒரு புதிய கட்சி களமிறங்கும்போது அதன் மீதான எதிர்பார்ப்பு இருப்பது இயற்கை. ஆனால், அந்த எதிர்பார்ப்பு தீவிர ரசிகர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடக் கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தேர்தல் முடிவுகள் என்பது ஒரு ஜனநாயக நடைமுறை. அதை முதிர்ச்சியுடன் எதிர்கொள்வதே ஒரு தலைவருக்கும், அவரது தொண்டர்களுக்கும் அழகு! இதைத் தான் நக்கீரன் கோபாலும் ஒரு கோரிக்கையாகவே முன்வைக்கிறார்.












Click it and Unblock the Notifications