Nanjil Sampath: தவெகவில் சேர்ந்ததுமே! பாஜகவுடன் இணக்கமாக செல்கிறீர்களா?னு கேட்ட நாஞ்சில் சம்பத்! விஜய் பதில் என்ன?
சென்னை: திமுகவை கொள்கை எதிரியாக கொண்ட நீங்கள், பாஜகவுடன் இணக்கமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுகிறதே என விஜய்யிடம் கேள்வி எழுப்பியதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், விஜய் திமுக மட்டும் எதிர்க்கிறாரே, பாஜகவுடன் இணக்கமாக செல்கிறாரா என கேள்வி எழுப்பினர்.
அதற்கு நாஞ்சில் சம்பத், "நான் இதை விஜய்யிடம் கேட்டேன். பாஜகவுடன் இணக்கமான போக்கு இருப்பதாக சொல்கிறார்களே என கேட்டேன். அதற்கு அவர் அப்படியெல்லாம் இல்லை. தேர்தல் இங்கு நடக்கவிருப்பதால் அதிகாரத்தில் இருக்கும் கட்சியை கூர்மையாக விமர்சிக்கிறேன். அதனை (பாஜக) பின்பு பார்த்துக் கொள்ளலாம் என பதில் அளித்தார்.
பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை கொள்கைத் தலைவர்களாக விஜய் வைத்துள்ளார். கரூர் வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உத்தரவிட்டதைத் தொடர்ந்து அது விஜய்க்கு கிடைத்த வெற்றி என தெரிவித்திருந்தேன்.
அந்த நிமிடத்தில் இருந்து காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கான வசை சொற்களால் என்னை அறிவாலயத்தில் இருந்து வசைபாடினார்கள். வள்ளுவர் கோட்டத்தில் நடந்த காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு புத்தக வெளியீட்டு விழா, அறிவு திருவிழாவில் என்னை திட்டமிட்டு நிராகரித்தார்கள். துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் விழாவுக்கு ஒரு திங்கள் முன்னே என்னிடம் தேதி வாங்கினார்கள். ஆனால், அந்த நிகழ்ச்சியில் கரு. பழனியப்பன் என்னை மேடையிலேயே நக்கல் அடித்தார்.
திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீ, திமுக மேடையிலேயே என்னை குறைத்துப் பேசினார். நான் மனதளவில் உடைந்துபோனேன். நான் அவர்களிடத்தில் ஒன்றும் கேட்கவில்லை. கேட்டாலும், ஒரு சைக்கிளும் கூட கொடுக்கமாட்டார்கள். என் வயிற்றில் அடிப்பதுபோல், என் நிகழ்ச்சிகளை ரத்து செய்து என் வயிற்றில் அடித்தது எனக்கு மன வேதனை கொடுத்தது.
பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலை அம்மாள், வேலுநாச்சியார் ஆகியோரை கொள்கைத் தலைவர்களாக விஜய் வைத்திருக்கிறார். தற்போது அவர் பிரச்சாரம் என வீதிக்கு வரும்போது, 1967ல் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுரை எழுதிய அண்ணாவையும், 1977ல் ஆட்சி மாற்றத்திற்கு 'அ'கரம் எழுதிய எம்.ஜி.ஆரையும் அவர் அடையாளப்படுத்துகிறார்.
என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் பேச வேண்டிய செய்திகள் நிறைய இருக்கின்றன. இனி பரபரப்பாக இருக்கும். திருப்பரங்குன்றம் பற்றி ஏன் பேசவில்லை என நான் விஜய்யிடம் கேட்கவில்லை. ஆனால், என்னைப் பொறுத்தவரை அவர் இதில் பேசாமல் இருப்பது தான் அவருக்கு நல்லது. காரணம் குமரனும், குன்றும் எங்களுக்குச் சொந்தம் என சொல்பவர்கள், கலவர அரசியலை கையில் எடுக்கப் பார்க்கிறார்கள். இதில் ஒரு தரப்பிற்கு எதிராகவும், ஆதரவாகவும் பேசாமல் இருப்பதே விஜய்க்கு நல்லது.
தமிழகத்தில் இளைஞர்களை அதிகம் வைத்துள்ள கட்சி தவெக. இந்த இளைஞர்களை வைத்து தமிழகத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வருவார் என விஜய் நம்புகிறார். தமிழ்நாடு முழுவதும் பாசறை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று விஜய்யிடம் கூறினேன். இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். தவெகவில் பதவியை விட பிரச்சாரம் செய்ய என்னை அனுப்பினாலே அதை நான் செய்வேன் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
நாஞ்சில் சம்பத் அண்மையில் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அண்ணாமலை தனி கட்சியை தொடங்க வாய்ப்பிருக்கிறது. அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. அதற்கு ஒருங்கிணைப்பாளராக ஒரு நபரை போட்டிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை தூத்துக்குடி மதிமுக மாவட்டச் செயலாளராக இருந்த செல்வம்தான்.
இந்த டிசம்பரில் அண்ணாமலை கட்சி தொடங்க போவதாக சொல்கிறார்கள். இவர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. பாஜகவில் அண்ணாமலையின் பதவியை பறித்து, அவர் இடத்தில் நயினார் நாகேந்திரனை அமர்த்தினர். பாஜக தலைவராக மீண்டும் தான்தான் தேர்வு செய்யப்படுவோம் என கருதியிருந்த அண்ணாமலை, தனது பதவி பறிப்பால் மனம் உடைந்துவிட்டார்.
அண்ணாமலைக்கும் விஜய்க்கும் பொது எதிரி திமுக என்பதால் இருவரும் கூட்டணி அமைத்தால் கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியை வீழ்த்திவிடலாம். அதற்கேற்ப செங்கோட்டையனும் தவெகவுக்கு வந்துவிட்டார். அவரும் அண்ணாமலையும் தொண்டர்களால் எளிதில் அணுகக் கூடியவர்கள். கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியின் அரசியலை சரிக்க அண்ணாமலை + விஜய் கூட்டணி அமைத்தால் போதும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications