ஒரு பக்கம் பாதுகாப்பு.. மறுபக்கம் விழாக்கோலம்.. சீன அதிபரை அசத்த காத்திருக்கும் தமிழகம்
Recommended Video
சென்னை: ஒட்டுமொத்த சென்னையும், மாமல்லபுரமும் விழாக்கோலம் பூண்டுள்ளது. நவராத்திரியாலோ, தீபாவளி நெருங்குவதாலோ உள்ள கொண்டாட்டம் இல்லை இது. உலகின் முன்னேறிய ஒரு சில முக்கியமான நாடுகளில் ஒன்றான சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகைக்கான முன்னோட்டம்தான் இது.
நாளை மதியம் சென்னை வருகை தரும் ஜி ஜின்பிங், அங்கேயிருந்து தனது சிறப்பு வசதி கொண்ட கார் மூலம், மாமல்லபுரம் செல்கிறார். ஆசிய நாடுகளில் இந்தியாவும், சீனாவும் மிக மிக முக்கிய வல்லரசு நாடுகள்.
எனவே, இவ்விரு நாட்டு தலைவர்கள் சந்திப்பை சீர்குலைக்க, அன்னிய சக்திகள் முயலக்கூடும் என்று உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதிலும், காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா எடுத்த அதிரடிக்கு பிறகு, பாகிஸ்தானின் நட்பு நாடான சீனாவின் அதிபர் இந்தியா வருவது, அதுவும் நட்புமுறை பயணமாக வருவது முக்கியமானது என்பதால், வரலாறு காணாத பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
|
அசத்தல்
பாதுகாப்பு நடவடிக்கை ஒருபக்கம் என்றால், சீன அதிபரை வரவேற்கவும் படுதீவிரமாக ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழக அரசு இதற்காக விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. மற்றொரு பக்கம், சென்னை கொளத்தூரிலுள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகள், ஜி ஜின்பிங் பெயரை, சீன மொழியில் எழுதுவது போல, அணிவகுத்து நின்று நடனம்புரிந்தனர். அவர்கள், ஜி ஜின்பிங் போல முகமூடியை அணிந்திருந்தனர்.
|
சிசிடிவி கண்காணிப்பு
மாமல்லபுரம் நகரம் முழுக்கவே, பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிதாக சிசிடிவி கேமராக்கள் பல இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. வெளிநபர்கள் மாமல்லபுரம் நகரம் உள்ளே செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த காட்சிகளை இங்கே பாருங்கள்.
|
பாதுகாப்பு
சர்ப்ப காவல் என்ற வார்த்தையை காவல்துறை வட்டாரத்தில் தெரிவிப்பார்கள். அதுபோன்ற நாகப்பாம்பு ரீதியிலான பாதுகாப்பு வளையம் மாமல்லபுரத்தில் போடப்பட்டுள்ளது.
|
அசத்துவோம்
மோடியும், ஜி ஜின்பிங்கும், அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு நடத்துவது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே, கடந்த வருடம் ஏப்ரல் மாதம், சீனாவின், ஊகான் நகரில் இரு தலைவர்களும் இப்படி ஒரு சந்திப்பை நிகழ்த்தினர். அங்கேயுள்ள ஏரியில், இரு தலைவர்களும் மட்டுமே அமர்ந்து டீ சாப்பிட்டபடி பேச்சுவார்த்தை நடத்தியது, உலக தலைவர்களால் உற்று நோக்கப்பட்டது. மோடிக்காக சிறப்பு உணவுகளை ஏற்பாடு செய்து அசத்தியிருந்தார் ஜி ஜின்பிங். நாளை மாமல்லபுரத்தில் இரு தலைவர்களும் சந்திக்கும்போது, ஊகான் நகர பேச்சுவார்த்தையைவிட சூப்பராக ஏற்பாடுகளை செய்து அசத்திவிட வேண்டும் என இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாளை இரவு ஜி ஜின்பிங்கிற்கு, மோடி அளிக்கும் விருந்திலும் அசத்தல் மெனு உள்ளதாம். எப்படியோ விருந்தோம்பலில் சிறந்த தமிழ்நாட்டில், சீன அதிபர் அசந்துபோகும் அளவுக்கு தடபுடல் கவனிப்புகள் கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.