காரமாக தான் சாப்பிடுவீங்களா? ஆமாங்கய்யா! அப்பத்தான் நோய் வராது! முதல்வரிடம் கூறிய நரிக்குறவர் பெண்!
சென்னை: காரமாக சாப்பிட்டால் வியாதியே வராது என முதலமைச்சர் ஸ்டாலினிடம் நரிகுறவர் பெண் ஒருவர் கூறிய சுவாரஸ்ய நிகழ்வு திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
முதல்வர் தங்கள் இல்லம் தேடி வந்து சிற்றூண்டி சாப்பிடுவதை பார்த்தால், கனவா இல்லை நினைவா என எண்ணத் தோன்றுவதாக அந்த நரிகுறவர் பெண் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நீங்கள் சமைத்த கறி சுவையாக இருப்பதாக நரிகுறவர் பெண்ணிடம் முதல்வர் பாராட்டிவிட்டு புறப்பட்டார்.

நரிக்குறவர் சமுதாயம்
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் குடும்ப அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்டவைகளை பயனாளிகளுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், அதைத் தொடர்ந்து ஆவடி பேருந்துநிலையம் அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு சென்றார். நரிகுறவர் சமுதாயத்தை சேர்ந்த மாணவிகளான தர்ஷினி, பிரியா, திவ்யா ஆகியோர் ஏற்கனவே தன்னை சந்தித்த போது விடுத்த அழைப்பை ஏற்று அவர்களது இல்லத்துக்கு சென்றார் முதல்வர்.

முதல்வர் வருகை
முதலமைச்சர் ஸ்டாலின் வருகை பூரித்துப்போன நரிகுறவர் பெண் ஒருவர், தனது வீட்டில் சமைக்கப்பட்ட இட்லியையும், வடையையும் அவருக்கு சிற்றூண்டியாக கொடுத்தார். கூடவே அதற்கு தொட்டுக்கொள்ள நாட்டுக்கோழி குழம்பையும் கொடுத்தார். முதல்வர் அதை சாப்பிடத் தொடங்கியதும், காரமாக இருப்பதை உணர்ந்தார். உடனே தனது அருகில் நின்ற அந்த நரிக்குறவர் பெண்ணிடம், எப்போதும் காரமாக தான் சாப்பிடுவீங்களா என வினவினார்.

நோய் வராது
அதற்கு பதிலளித்த அந்தப்பெண் ''ஆமாங்கய்யா, அப்போது தான் ஜம்முன்னு இருக்க முடியும், காரமாக சாப்பிட்டால் சளி பிடிக்காது, காய்ச்சல் வராது எங்காளுக எல்லாம் அதனால் தான் நன்றாக இருக்கிறோம்'' என பதிலளித்தார். மேலும், கொரோனா இரண்டு அலைகளின் போதும் தங்கள் குடியிருப்பில் உள்ள நரிக்குறவர் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை எனக் கூறினார். உடனடியாக அதை ஆமோதித்த அமைச்சர் நாசர், இங்கு யாருக்குமே கொரோனா வரவில்லை என்றும் தடுப்பூசி செலுத்த வந்த போது மரத்தில் ஏறி ஒளிந்துகொண்டார்கள் எனவும் விளக்கினார்.

கனவா நினைவா
முதல்வர் தங்கள் இல்லம் தேடி வந்து சிற்றூண்டி சாப்பிடுவதை பார்த்தால், கனவா இல்லை நினைவா என எண்ணத் தோன்றுவதாக அந்த நரிகுறவர் பெண் சொல்லிக்கொண்டே இருந்தார். கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு முதல்வர் கைகழுவ எழுந்தவுடன் ஐயா, இன்னும் இரண்டு வாய் சாப்பிடுங்க என வாஞ்சையுடன் நரிக்கிறவர் பெண் கேட்டுக்கொண்டார். முதல்வரின் இந்த விசிட் முழுக்க முழுக்க சுவாரஸ்யமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications