"பிரைட் மன்த்தில் மகுடம்"... நர்தகியை களமிறக்கி அப்ளாஸ் அள்ளிய முதல்வர்.. இந்தியாவிலேயே முதல்முறை!
சென்னை: தமிழ்நாட்டு மாநிலத்தில் கொள்கை வளர்ச்சி குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக நர்த்தகி நட்ராஜ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவரின் நியமனம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் மாநில திட்டக் குழு தற்போது தமிழ்நாட்டு கொள்கை வளர்ச்சி குழுவாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 1971ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி மூலம் இந்த குழு உருவாக்கப்பட்டது. மாநிலத்திற்கான வளர்ச்சி திட்டங்கள், எதிர்கால வளர்ச்சி பணிகள், நிதி மேலாண்மை, திட்டங்களை செயல்படுத்துதல் என்று பல்வேறு விஷயங்களை மாநிலத்தில் கொள்கை வளர்ச்சி குழுதான் முடிவு செய்யும்.
பணி நீக்கப்பட்ட 7 மாற்றுத் திறனாளி கணினி ஆசிரியர்கள்.. பணி வழங்க முதல்வரிடம் உருக்கமான கோரிக்கை
இதன் தலைவராக முதல்வர் ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். துணை தலைவராக பொருளாதார வல்லுனர் ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டார். ஒரு அமைச்சருக்கு உரிய அதிகாரம் தற்போது இதன் துணை தலைவர் ஜெயரஞ்சனுக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
10 பேர்
இந்த நிலையில் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் முழு நேர உறுப்பினராக பேராசிரியர் ராம.சீனுவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தற்காலிக உறுப்பினர்களாக 10 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கொள்கை வளர்ச்சி குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக நர்த்தகி நட்ராஜ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவரின் நியமனம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
வரவேற்பு
நடனக்கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜன் தமிழக அரசின் கலைமாமணி, இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். இந்த விருதுகள் மட்டுமின்றி பல்வேறு சர்வதேச விருதுகளை தனது நடனம் மூலம் பெற்று இருக்கிறார். தஞ்சாவூர் நாட்டிய முறை, தமிழகத்தின் பாரம்பரிய நடன கலையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமை இவருக்கு உண்டு.
பத்மஸ்ரீ பட்டம்
பத்மஸ்ரீ பட்டம் பெற்ற முதல் திருநங்கை கலைஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டியம் தவிர்த்து சமூக தேவை பணிகளிலும், எல்ஜிபிடிக்யூ + உரிமைகளிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் திருநங்கை நர்த்தகி நடராஜன். இவரின் வரலாறு மற்றும் சாதனைகள் தமிழ்நாடு 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் கூட இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது மாநிலத்தில் கொள்கை வளர்ச்சி குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக நர்த்தகி நட்ராஜ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஏன்?
எல்லா பிரிவினருக்கும் இந்த குழுவில் இடமளிக்க வேண்டும் என்பதால் மருத்துவர்கள், பொருளாதார வல்லுநர்கள் என்று பல வல்லுநர்களை முதல்வர் இதில் தேர்வு செய்துள்ளார். அதில் மூன்றாம் பாலினத்தவர் சார்பாக திருநங்கை நர்த்தகி நடராஜனும் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் சாதனைகள் மற்றும் பணிகள் காரணமாக அவருக்கு இந்த உயரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே திருநங்கை ஒருவர் மாநில/மத்திய அரசின் திட்டக்குழுவில் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை!
வரவேற்பு
தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர் மற்றும் பலர் மத்தியில் முதல்வர் ஸ்டாலினின் இந்த முடிவு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. எல்ஜிபிடிக்யூ + மக்கள் கொண்டாடும் பிரைட் மாதம் ஆகும் இது. ஜூன் மாதத்தை தங்களின் மாதமாக எல்ஜிபிடிக்யூவினர் கொண்டாடி வருகிறார்கள். அப்படிப்பட்ட மாதத்தில் திருநங்கை நர்த்தகி நடராஜன் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டு இருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.